Tuesday, 27 October 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-25

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-25

போற்றித் திருஅகவல் -திருவாசகம்
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!
                                                              மாணிக்கவாசகர் 

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு மற்றுமொரு நினைவுப் பகிரல் .பேரின்பம் என்பது எக்கணம் நினைக்கினும்,அக்கணம் அதே உணர்வில் மனப்பொக்கிசத்தில் தோன்றும் .எனவே இது காலாவதியான பதிவல்ல ,காலம் தோறும் நினைவில் நிற்கும் பதிவு.
மணிவாசகர் செப்பும் திருவாகத்திற்கிணங்க ,இந்த கட்டப் பதிவிற்கு மணிவாசகரின் போற்றித் திருவகவல் துணைக் கொண்டேன், இதனினும் சிறந்த வார்த்தைதான் ஏது .
  யானை முதலா எறும்பு ஈறு ஆய,
  ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
  மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
.........................................................................................................
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
இவ்விதம்  யாவிலும் பிழைத்தும் பெற்ற பிறவி அது ,ஆவி துடிக்க, 
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது......
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
கந்தன் கை வேலது  காட்டும் வழியதுவே யாம் கொண்ட பாதை என நின்ற தாத்தன் சன்னதி வழிபாடு முடித்து சுப்பன் காவடி பெருமாள் கோவில்நோக்கி புறப்பட்டுச் சென்றது .
பெருமாள் கோவில் முன்னணியில் வீற்றிருக்கும் கருப்பன் ,இங்கு வந்து சேர்ந்ததெல்லாம் கருப்பன் ,பெருமாள் அவதாரமோ இக்கருப்பன் ,காத்து ரட்சிக்கும் காவல் தெய்வத்தின் சன்னதில் தழல் அது கண்ட மெழுகு போல் உருகி தாவி குத்தித்து உலகளந்த பெருமாள் தாமென காட்டும் வகையில் காவடி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்,தன்னிலை கொண்டவரும் ஆடுவர், தனை மறந்து நின்றவரும் ஆடுவர்,கொட்டு கண்ட கூட்டமது கந்தன் காவடி தாங்கி நின்றதது ,எனில் அவன் அருளை உணர்ந்தோர் அகத்தில் குடிகொண்டு கந்தன் காட்சி தருகையில் அதன் முன்னே மகுடி வாசிப்பில் மயங்கிய அரவம் போல் ஆடிப்,பாடி மகிழ்ந்து, தத்தம் விதத்தில் வெளிபடுத்தி,பிறவி முழுமைக்கும் இக்கணம் ஒன்றே எமை நிறைத்து நிற்கும் என நினைவுப் பதிவில் பதிந்திருப்பர். என்றேனும் நம் சுயநினைவு மறந்து பிச்சியாய் ,பித்தனாய்  பிதற்றி நின்றாலும், அப்பா உன்னை நினைந்துருகி யாம் மகிந்திருந்த இக்கனத்தை மட்டும் எம்மிடம் விட்டு விடும் என மனமுருகி வேண்டி நிற்போம்.
                               பெருமாள் கோவில் தரிசனம் செய்ய மெய்யடியார் கூட்டம் முன்னேற,அங்கே  அன்று மணமுடித்த தம்பதியர் காத்து நின்றனர்,விரதம் இருந்து காவடி சுமந்தோர் தந்தனர் ஆசிகள்.பிற்பாடு இந்த காவடி நிகழ்வுக்குப் பின் இத்தனை காலம் ஆனதால் அறிய வந்தது ,அந்தத் தம்பதியர் வாழ்வு சிறக்கவில்லை என்று. பெறுவதற்கு அரிய  ரத்தினத்தை சிலர் பெறுவார், தாம் பெற்றது ரத்தினம் என்றே அறியாது அதை வீசி எறிந்தால் அதன் அருமை தெரியாது தூக்கி எறிந்தால் அது ரத்தினத்தின் குறை அன்று,அதை தந்தவனின் குறையும் அன்று ,அதன் அருமை அறியாமல் தூக்கி எறிந்த மூடர்களின் குறையே. எம் அப்பன் ஆடும் ஆட்டத்தையும் அவன் நிகழ்த்தும் நிகழ்வுகளில் சாரத்தையும் புரிந்துக் கொள்ளவும் அறிவு வேண்டும். நன்மை தீமை இரண்டினும் கற்பிப்பான் இறைவன்.
                                இந்தக்கட்டத்தில் என் மனதின் பதிவு ஒன்று..... இதுகாறும் இல்லா ஓர் உணர்வு எமை ஆட்க்கொண்டது , ஆடிப்பாடி நான் எனும் அகந்தை விட்டு,லட்ஜை எனும் உணர்வும் விட்டு,பேராயிரம் உடையப்பெம்மனுக்கு, ஓர் அடியாளாய் மாற்றுருவம் கொள்ள. ஆனந்த அனுபவம், இந்த அனுபவம் தந்த உணர்வே இன்றும் என் ஆன்மீக உலகின் அரிச்சுவடி. எவ்வுயிர் ஆயினும் அதனை தடுத்தாட்கொண்டு திசைத் திருப்ப இறைவன் திருஉள்ளம் கொள்வான்,அதற்கனா ஓர் தருணம் என்றே இதை எண்ணுகிறேன்.
                                         பெருமாள் கோவில் வீதிகளை வலம் வந்தது காவடி ஆட்டம், தெருவின் வழி தோறும் ,குளிர் பானங்களும்,தண்ணீர் குடங்களுடன் மக்கள் தங்கள் பக்தி,ஸ்ரத்தையை செலுத்தினர். காவடிகள் கரம் மாறின, அதற்காய் காத்திருந்தவரிடம்.ஒரு முறையேனும் தாமும் சுமந்து கந்தன் காவடியை சுமந்து சுகம் பெற மாட்டோமா என ஏங்கியது பக்தர் உள்ளம்.யாம் பெற்ற இன்பம் பெருக எம் மனை வாய்த்தவரும் என காவடி தூக்கியவரும்  மனமுவன்தனர்.
                                       பெருமாள் கோவில் வெளி வீதிகளில் காளி  கோவிலும்,பகவதி கோவிலும் அமைந்திருக்க, அங்கே நிலைக்கொண்டது மற்றொரு காவடிக் களி விருந்து. பகவதிக் காவடி பம்பரமாய் அந்தரத்தில் சுழன்றது ரஞ்சித் அண்ணன் கைகளில்.சக்கரம் தாங்கிய ஆதி நாயகி தீமைகளை இதுபோல் சுழற்றியே விரட்டி இருப்பாளோ , ரேவதி தூக்கிய சக்தி காவடி மகாலக்ஷ்மி தோளில் பறவையாய் இறங்கிவிட, நாட்டியம் பயின்ற எங்கள் அத்தாச்சியிடம் காவடி தன் நளினமான ஆட்டத்தைக் காட்டியது. கொண்டவர் கைகளில் அவர்தம் மனம் போல் சுழன்று, நின்று,தவழ்ந்து,தரிசனம் தந்து,தழுவி நின்று அத்தனை விந்தையும்  காட்டி வீதிவலம் முடித்து முருகன் இல்லம் அடைந்தது. அங்கு அடியார்க்கு ,அடியாராய் பாதபூசை செய்ததை ஏற்று ஆச்சாரம் குலையாமல் ஆறுமுகப்பெருமான் வீற்றிருந்த தம் இடம் புகுந்தது.
                                 சூரிய பகவான் தன அருள் பார்வையில், வருணனின்  குளிர்மையில்,வாயுதேவன் மிதமான தீண்டலில், எல்லாவித அருளும் நிறைந்து காவடி தன தலைவன்  கழலடி தொழ பழனியம்பதி  நோக்கி புறப்பட்டது.


Tuesday, 7 July 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-24

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-24
குலகுரு கவசம்
பெரிய தாத்தா நினைவுகளில்அனைவரும் நீந்தி கொண்டு இருக்கும்
வேலையில் கடந்த ஆண்டு காவடியின் நினைவுகளில் நீட்சியை மறைக்க முடிய வில்லை. அதோடு ஸ்ரீ மான் ASP அவர்களின் நூற்றாண்டு நினைவாக கடந்த ஆண்டுநான் எழுதிய சிறு கவசத்தை பகிர்வது மூலம் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
ரேவதி அருணாட்சலம் 
திருச்சிற்றம்பலம் 
அல்லல் போம் வல் வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகா துயரம் போம்-குணமதிக மா
அருணை கோபுரம் மேவும் கணபதியை தொழுதக் கால்.
தெளிவுகுருவின் திருமேனி கண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தாமே..
அறுபடைஅழகனை
ஆழ்ந்தே நினைக்க
அகத்தினில் மலரும்
ஐயனின் உருவம்.
அருளரமுதே!
அறிவு கொழுந்தே!-என்றும்
எமை ஆளும்-அண்ணாமலை
புதல்வா...
அங்குத்தாயின் அருகே அமர்ந்து
ஆசிகள் அளிக்கும்- ஆறுமுகன்
மைந்தா....
அம்மையம்பதியில்
ஆனந்தமாய் அமர்ந்து
ஆன்மீகம் அளிக்கும்
அற்புத சீலா!
எளியோர் மனத்தே
என்றும் இருந்து
இன்னல் தீர்க்கும் -இக
பர சுகமே...
ஒன்றாய் பலவாய்
ஒளிரும் மணியே!
பழனி மலையின்-பக்தி
கனியே....-என்
சிந்தை நிறை-சிவ
ஞான குருவே-சிறு
மலைதேனே..
நினையா மனதை
நினைத்திட செய்யும்-நிமலா
நின்தாள்
சரணம்! சரணம்!
அழகா!அமரா!
அம்மை நகரின்
அருட்பெருஜோதி!
நின்தாள் சரணம்!
தயாள குணம் தந்து
எமை ஆண்டிடவே
வருவாய்..வருவாய்
வடிவார் அமுதே!
அடியார் உறவாய்
அருளே உருவாய்..
திருவே தருவாய்.. .
ஐயா சுப்பா!
குருவாய் வருவாய்
இருளை களைவாய்
அன்பர்கள் துணைவா
சாயி நேசா!
சத்திய நாதா!
காவடி சுமந்த
கருப்பனின் வடிவே
கவனம் ஈர்க்கும்
காந்த விழியே!
கருப்பனின் வாளே....
முருகனின் வேலே...
கருப்பனை தாங்கி களி நடம் புரிந்தாய்
பார்த்திபனுரில் பரவசம் கண்டாய்
பாலமுருகனை பாடியே துதித்தாய்
பாத யாத்திரை எங்களுக்கு அளித்தாய்...
பழனியின் வடிவே!
எங்கள் குருவே!
உம்மை நினைக்க
நிலையது உயரும்...
நினைத்தது நடக்கும்...
நிம்மதி நிலைக்கும்...
கேட்டது கிடைக்கும்...
அங்கம் சிலர்க்கும்...
அமைதி பெருகும்....
பார்க்க..பார்க்க
பயமது விலகும்...
பாவங்கள் தீரும்....
பகை அது நீங்கும்...
உம்மருள் இன்றி
உலகென்னகில்லை
உன்னைவிட்டால்
உறவெனக்கு இல்லை
உனையே நினைக்க
உனையே துதிக்க
எமை ஆண்டிடுவாய்-எங்கள்
ஐயா..
குறையோன் வாழ்வில்
நீயே கவசம்.
எம் குறை தீர்க்க
எழில் வேல் முருகனை
எழுந்தோடி வரசெயும்
எம் குலஞானி..
எத்தனை துன்பம்
எத்தனை இடர்கள்
அத்துணை இடரால்
அவதியுறாமல்- எதையும்
தாங்கும் இதயம் தந்த
மாசில்லா குருவே!
மரகத மணியே!
வாழ்க! வாழ்க! தணிகை படியாய்...
வாழ்க!வாழ்க!பழனிஎம்பதியாய்...
வாழ்க!வாழ்க! பரங்குன்றின் அழகாய்....
வாழ்க!வாழ்க! செந்தூர் அலையாய்...
வாழ்க!வாழ்க! சுவாமி மலை ஞான மாய்....
வாழ்க! வாழ்க! சோலைகனியாய்.!
                             கந்தன்  காவடிசுப்பன் குடில் நோக்கி வந்தடைந்தது ,அம்மை நகர் அழகு வீதிகளில் ஆடி வந்த காவடி தாத்தன் புகழ் பாடியபடி வந்தடைந்தது  பசுமை மிகு அழகியத் தோட்டத்தின் நடுவே தியானத்தில் அமர்ந்து நம் யாவரையும்  அருளாசி தந்து பக்தி எனும் ஞானப் பழம் ஈந்து அதுவே நம் குலத்தின் பலம் என உணர்த்தி ஆதி குருவாய் அமர்ந்த சுப்பையன் வனம் நோக்கி கந்தையன் காவடி நடந்தது. 
                            காங்கேயன் மனமகிழ் காவடியைப் போற்றி 
வண்டுகள் ரீங்காரமாய் புகழ் பாட, ரோஜா மலர்கள் தம் மலர்ந்த முகத்தால் வாழ்த்துரைக்க அமைந்திருந்த புற்கள் பசும்மேனி கொண்டு மகிழ்ந்து பார்த்திருக்க, வரப்புகள் இன்று  காவடி சுமந்தோர் பாதம் சுமக்க பெற்ற வரம்போல் வருமோ என வியந்திருக்க காத்திருந்த அந்த தருணம் வந்தது என காவடிகளும் தம் கந்தக் கடவுளுக்கு  அடிமைபூண்ட சுப்பன் வனம் நோக்கி வருவதில் பெருமை கொள்ள முன்னேறியது காவடிகள்.
                            சிறுவர் முதல் பெரியவர் வரை தங்கள் முன்னோர் நாமம் சொல்லி அவர் தம் வழிகாட்டுதலுக்கு  தாத்தன் வாய் மொழி வரும் அருளாசி தரும் மனோபலத்திற்கு நன்றி சொல்ல சாரையாய் வரும் எறும்புகள் போல் சரமாய் வரும் அம்புகள் போல் சரணம் சொன்னபடி வரப்பு வயலோடி ஊர்ந்து உயர்ந்து முகத்தில் உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகி உடையவன் பாதம் அடைந்ததனர். 
                             பெற்றவரே அறிவார் பிள்ளைகள் தேவை, ஆயிரம் துன்பம் வந்தாலும் ஆங்கோர் அன்னைமடி இருப்பின் அத்தனையும் கலைந்தோடும்,காத தூரம் பயந்தோடும். இங்கே வீற்றுருப்பது தாய்க்கு தாயாய் என்றும் துணை நிற்கும் முத்துரத்தினம் உடனுறை சுப்பையன். தகப்பன் உலக நியதிப்படியே  ,நிகழ்வுகள் நடந்தேறும் என கடுமைக் காட்டினாலும் அன்னை மனம் நிற்குமோ,சிவ சக்தியில் , சிவம் முன்னே சென்றுஅருவமாய்  நின்ற போதும்  தம் சக்தியால் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆலமரமாய் தளைத்து நிற்பதை அடிமரமாய் நின்று தாங்கிச் சென்ற முத்துரத்தினம் எனும் சக்தி பிரியாவிடையாய் நம் பாட்டனுடன் உறைகின்ற வீடு. மனம் கணத்து வந்தவரை மனம் தேற்றி ஆசுவாசம் தந்தே அனுப்பிவைத்தனர் முருகா தாத்தாவும்,பாட்டியும்.
                             ஒவ்வொரு ஆன்மீக நிகழ்விலும் தங்கள் இருப்பைக் காட்டி நம்பிக்கை தந்து திசையறியாப் பறவைகளாய் திரியும் நமக்கு தக்க வழியைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.


Wednesday, 27 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-23

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-23 


                                             ஓம் எனும் பிரணவத்தின் பொருள் கேட்டு பிரம்மனை சோதித்து தண்டித்து விளையாடினர்  அப்பனும் மகனும். அதன் பயனாய் சுவாமிமலையில் தகப்பன்சாமியாய் வீற்றிருந்தான் கண்ணுதற் கடவுள். 
                                           ஓம் என்ற பிரணவம் சிவபெருமான் எழுந்தருளும் பீடம், மற்றவர் தோன்றும் இடம்,எல்லா எழுத்துக்களுக்கும் வேதங்களுக்கும் ஆதியானது.காசியில் மரணம் அடைபவருக்கு சிவபெருமானால் செவியில் ஓதப்படும் தாரக மந்திரம். அகாரம் உகாரம் மகாரம் இணைந்த பிரணவ மந்திரம்.
                                           எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் 
                                                 பிரமனுக்கும் ஈசன் என்னத் 
                                           தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம் 
                                                 எனவேதம் சாற்றும் அல்லால் 
                                           முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணியன் 
                                                  ஓம்எனவம் முக்காற்  கூறும் 
                                           இக்கருத்தை அறியானை  எவ்வாறு 
                                                 விடுவிப்ப தியம்பு மின்னோ 
                                                                                    காஞ்சிப்புராணம் 
 பிரணவத்தின் பொருள் என்பது சுப்ரமண்யோம் என்று சொன்னபடி நீயும்,சதாசிவோம் என்று கூறியபடி நானும், நாம் இருவருமே அதன் பொருளாகின்றோம் ,என்றும் இதில் சந்தேகமில்லை எனவும்  முருகப்பெருமான் உபதேசித்ததை கேட்ட சிவபெருமான் கூறுவதாக வடமொழி ஸ்கந்தபுரானத்தில் வருகிறது. அதனை தழுவியே மாதவ சிவஞான சுவாமிகள் காஞ்சி புராணத்தில் மேற்கண்ட பதிகத்தை இயற்றி உள்ளார்.

                                        ஓம்  சரவணபவ எனும் மந்திரத்தில் நம் ராஜராஜேஸ்வரியின் மைந்தன்   சக்திவேலும் மகிழ்ந்திடுவார் எனும் போது அந்த சக்தி உமை பாலகர் மகிழாது இருப்பாரோ.ஓம் எனும் மந்திரம் சொல்லி ஓராயிரம் நாமங்கள் செப்பி நாதாந்தமுடிவேலை வணங்கி நிற்க அக்கணமே வந்து அருளுவான் அங்கையற்கண் தாய் மைந்தன்.அகரம் முதலாய் அனைத்து உயிர்களிலும் உடன் நின்று ஆட்டிவைக்கும் முருகப்பெருமான் பக்தி வழியில்  செல்லும் அடியார்க்கு முக்தி நிலையும் அருளிடுவான்.
                                   கருப்பன் சன்னதி விட்டு கடைவீதி  வழியாக பிரதானசாலை அடையும் முன்னே ராமருக்கு வாய்த்த லெட்சுமனனாய்  பாட்டனுக்கு வாய்த்த தனையன் ரயில் தாத்தா என்ற அடைமொழியுடன் நம்மில் பரிச்சயமான எஸ் ஏ என் இல்லம் முன் நின்று காவடி தன்  மரியாதை ஏற்றுக் கொண்டு பாசமுடன் நேச நெஞ்சங்களுக்கு வாழ்த்தும் கூறி முன்னேறியது காவடி.குலதெய்வ கோவில் பூசாரிகள் முன்னே குங்குமம் தோய்ந்த வெட்டிய எலுமிச்சையை நாற்புறமும் எறிந்து கருப்பன் பெயரால் காவல் காத்துவர கடந்தது காவடி பிரதான சாலையை. 
                                        கொட்டும் மேளம் இடியென முழங்க நாதமெனும் இசை நயமாய் கந்தனது மந்திரத்தை ஒலிக்க முன்னேறியது காவடி பாட்டன் குடி கொண்டிருக்கும் தோட்டம் நோக்கி.தார் சாலை கடந்து ஓடை கடந்து தாய் மடி தேடும் பிள்ளைபோல் குலம் காத்து பக்தி மார்க்கம் காட்டி,அனைவரையும் ஒன்றிணைத்து வாழையடி வ்ழையாய் இந்த குடும்பம் தழைக்க அமர்ந்து அருள்புரியும் முருகா தாத்தாவின் குடில் நாடி அவர் தம் வாரிசுகள் வரிசை வரிசையாய் சாரை,சாரையாய் தன் பொந்து நோக்கி ஊர்ந்து செல்லும் எறும்பினை  போல் ஓடி சென்றனர்.
                                        காவடி திரு விழா கொண்டாட எம் சொந்தம்  மட்டும் ஆவல் கொண்டிருக்கவில்லை அந்த தோட்டமும் ஆவல் கொண்டிருந்தது.ரோஜா மலர்களை மலர்வித்து நித்தமும் பூஜைக்கு என தன் பங்காய் வள்ளி மனாளருக்கு சேவை செய்தது.காவடி பூஜை என கொண்ட நாள் முதலாய் அதன் சிரம் ஏறி அர்ச்சித்து தான் மலர்ந்த பாக்கியம் கொண்டன அந்த ரோஜா மலர்கள்.




                                       

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-22

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-22

கந்தநம !
ஐந்து முகர் தந்த முருகேசநம !
கங்கை உமை தன் மைந்த நம! 
பன்னிரு புயத்த நம!
 நீப மலர் மாலை புனையும் தந்தை நம! 
ஆறுமுக ஆதி நம! சோதி நம!
தற்பரமதாம் எந்தை நம !
என்றும் இளையோய் நம குமார நம!
                                                 -கந்தபுராணம் 
                 
                                         முருகப்பெருமான் தம் பிள்ளை பருவத்தில் அற்புதமான திருவிளையாடல்கள் புரிந்தார் .சில நேரம் மேரு மலைக்கு தாவி,சிகரத்தை பெயர்த்து கயிலை மலை மீது எறிவார், சில நேரம் வாத்தியம் இசைப்பார் பலதிக்குகளில் உள்ள பர்வதங்களை பாம்புகளால் கட்டி இழுப்பார் , இப்படியாய் அவர் புரிந்த லீலைகளை கண்டு இந்திராதி தேவர்கள் அச்சம் கொள்ள 
அனைவரும் ,அசுர குழந்தையோ என ஐயம் கொண்டு பாலகனுடன் சமர் புரிய அவரை துவம்சம் செய்தார் வேலவர் ,தேவகுரு வேண்டி நிற்க தேவர் பிழை பொறுத்து அருள் புரிய சமரில் வீழ்ந்தவர் உணர்வு பெற்றனர் அவர் தம் பிழை உணர்ந்து ஆறு முகக்கடவுளை எண்ணி வணங்கி நின்றனர்.அவருக்கு விஸ்வரூபம் காட்டி பாலகன் அல்லன் இவன் பரமேஸ்வரனே என
உணரவைத்தார்.அதுவே இந்த துதி பாடல் .
                    வெற்றிவேல் வீரவேல் என கோசம் கொண்டு சூரனை கொன்ற வெற்றி வேல் முருகனை போற்றி புகழ்ந்திருப்போம் அதில் அரோகரா என்பது 
அர ஹரோ ஹராஎன்பது ஆகும் திருஞனசம்பந்தரால் சைவர்களுக்கு அருளப்பட்ட இந்தவார்த்தைக்கு இறைவனே, துன்பங்களை நீக்கி 
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக' என்பதே பொருள் நாளடைவில் இது கந்தவேலின் அடியார்க்கு மட்டுமே உரித்தானது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றால் ,வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள்  வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக' என்பதே பொருள்.

                                          கந்தன் படை காவடி தூக்கிவெற்றிவேல் முருகனுக்கு  அரோகரா என்று  அம்மை நகர் ஆடி வர அங்கிருந்த மாந்தரெல்லாம் காவடி தோள்  சுமந்து நிக்கும்  பக்தர்களை பக்தியுடன் வணங்கி நின்றனர் .முருகன் அடியார் பலர் அருள் நோக்குடன் ஆடிவர அடியார் சேவை ஆண்டவருக்கு செய்யும் சேவை என தாகத்திற்கு நீர் தந்து ,பாதத்தில் நீர் உற்றி குளிர்வித்து விழுந்து வணங்கி திருநீரை பிரசாதமாய் பெற்று பரவசித்து இருந்தனர் 
                                           சொந்த பந்தம் கூடி வர குவிந்திருந்த பக்திக் கூட்டம் கந்தா என்று கசிந்துருகி கருப்பன் குடிகொண்ட அரசமரம் நோக்கி வந்தது.அரசன் வீற்றிருக்கும் அம்மரம் அரசமரம் ஆனது.யாமிருக்க  பயமேன் என நவிலும் நற்றமிழ் கடவுளும், நானே உன்னுடன் இருக்கிறேன் என்று நமை நடத்தி வைக்கும் கருப்பனும் கடை கண் நோக்கி இருக்க கவலை ஏன் கண்மணிகளே! கலங்காதீர்கள் பார்த்திபனூர் குடிகொண்ட கருப்பனும்,குறிச்சி  திட்டில் குடியிருக்கும் மாவடிகருப்பும் சுப்பன் குலம் காக்க காவலாய் நீவீர் குடி கொண்ட  குச்சில் எல்லாம் தண்டம் தாங்கி நிற்கின்றனர். வலிந்து வந்து உம்மை தாக்க வரும் பகைகளை எல்லாம் வலுவிழக்க செய்து வினை பயன் தன் கடமை முடிக்க நியதிப் படி சிறிது இடம் தந்து அதையும் தாங்கும் வலிமை தந்து துணை நிற்கின்றனர்.போதாத  காலம் வரும் போதும் பொறுமையின்றி நாம் தவிக்கும் போதும் புடம் போடும் தங்கம் தககக்கும் எனும் சொல்லுகினங்க நம்மை சுத்திகரித்து நம் நோய்க்கு மருந்தாய், நோகும் இதயத்திற்கு மயிலிறகாய் நம்பிக்கை வித்தாய் , தாயாய் நின்று காக்கின்றனர்.

                                                   அரண் வாழும் அந்த அரசமரம் பசுமையாய் வசந்தகாலம் வந்தது நம் வாழ்வில் எனும் கட்டியம் கூறும் கட்டியக்காரனாய் கிளைகள் பரப்பி தழைகள் நிரப்பி குளிர்ந்திருந்தது. அங்கே ஆவாகனம் ஆனது அத்தனை கருப்பும். கந்தன் காவடியில் கருப்பின் கலப்பு, களிப்பு மிகுந்த ஆனந்த அணிவகுப்பு. ஆதி கருப்பு, இளையகருப்பு, ஆவேசக்கருப்பு, மாவடிகருப்பு,பிள்ளத்தி கருப்பு, என வகை வகையாய் வீறுகொண்டு விழி உயர்த்தி, ஆவேசக்குரல் உயர்த்தி ,அங்கம் அதிர அருள் வாக்கு தந்து ஆங்காரம் குடி கொண்டு அகங்காரம் அகற்றி,ஆழ்ந்து அகன்று நுனி குறுகிய வேல் போல் விழி தீட்சனியத்தால் பற்றவந்த பகை கடிந்து பரவசமாய் முன்னேறியது.
                                                 அம்மைநகர் பெற்றுவந்த வரமாய் நம் பாட்டன் சுப்பன் அவர் வம்சம் வந்த சண்முகத்தின் பெயரனாய் வம்சம் சுமந்த  கருப்பனையும் ,கருப்பனை சுமந்த சுப்பனையும் ஒரு சேர சுமந்த பார்த்திபன். அன்று அவன் மேனி குடி கொண்ட கருப்பனின் கருணையை சொல்ல மொழியும் பயன் தரா. நமது முன் தலைமுறை தம் தாத்தாவை முருகா தாத்தாவாக பார்த்திருக்கும் அவர்கள் கருப்பனை சுமந்ததையும் அறிந்திருக்கும் ஆனால் அன்றொரு நாள் ஊ ர்விளையாடிய சண்ட மாருதம் போல் கணை பொலிந்து வினை அகற்றும் கந்தன் கை வேலாய் நின்று சுற்றம் காத்த கருப்பனை தன் அங்கம் தாங்கிய எங்கள் பாட்டனாரை காண பேரு கிடைக்க பேரப் பிள்ளைகளுக்காய் நம் பாட்டன் சுப்பனாக  அன்று அவதரித்தது இந்த பார்த்தன் தான்.தர்மம் தழைக்க நடந்த மாபாரதப் போரில் முக்கிய பங்கு அன்று அந்த பார்த்தன் கொண்டான் ,இன்று சுப்பன் வம்சம் இடையறா வந்த இன்னல்களை தாண்டி,இதுகாறும் வந்த இருள்நிலையை  பக்தி எனும் படகில் ஏறி காவடி எனும் துடுப்பை போட்டு வாழ்வில் ஒளி மயம் காண விளையும் பொழுதில் உறுதுணையாய் தம் தேகம் வருத்தி பாட்டனை வருவித்து அருள் வாக்கினை தந்து முழுமையாய் தன்னை 
ஒப்புவித்தான் அருமை தம்பி பார்த்திபன்.
                                                   கருப்பன் சந்தியில் களிப்படைந்த காவடிக் கூட்டம் அவ்விடம் விட்டு ஆனந்தமாய் அடுத்தக் கட்டம். இதுவரை இருந்த நான் என்பது வேறு, இவ்விடம் முதல் என்னுடன் வந்த நான் என்பது வேறு. கொடுமுடி தீர்த்தம் மங்கையரின் சிரத்தினில் மாறி,மாறி பயணித்திருக்க,இந்த ஒரு கட்டத்தில் எனக்கு அதை சுமக்கும் பேரு.அன்று நான் சுமந்ததின் பயனே இன்று என்னால் இவ்விதம் ஓராண்டு கடந்தும் இம்மியளவும் குறையாமல் நிறைந்த பக்தி சுவை பரிமாறும் பாக்கியமும் தந்தது. தன்னிலை மறந்து தானே கூத்தாடிதானுமிருக்க,
தனக்கு மேலே மற்றொன்றும் ஆதிக்கம் செலுத்த சுய கட்டுப்பாட்டை மீறிய உணர்வு நிலை.அறிவியல் ஆயிரம் சொல்லட்டும், ஆத்ம சிந்தனை,தன்னை அறிதல் என எவ்விதமாய் பெயர் கொடுத்து இதனை விரித்துரைக்கட்டும்.
ஆயினும் குறை ஒன்றும் இல்லை இந்த உணர்வு நிலை தரும் நம்பிக்கை விதை போதும் ,சிக்கன பிடித்து சிங்காரவேலர் பதம் பற்றுவோம்.


                                         


Thursday, 21 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-21

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-21


ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி 
மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில் 
தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன் 
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்
                                                                                                 கந்தபுராணம் 

                ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகு எல்லாம் சேர்ந்து வரினும் செவ்வேளாகிய இவனது மலமறுத்த விமலமாம் திருவடியின் தூய அழகுக்கு ஒவ்வாது என்றால், பழமையான இப்பெருமானின் பெரும் வடிவு முழுவதுக்கும் யாரே உவமை கூறவல்லார்.
        இவாராய் வியப்பது யாரென அறிந்தால் நாமும் வியப்போம்.ஆம் யாரை வெல்ல, யாரின்  கொடுமை களைய பரம் பொருள் ஞானப் பழம் பொருளாய் அவதரித்ததோ அந்த சூரன் சொன்ன சொற்கள். மதி கெட்டு அவன் இதை சொன்னானோ ஏனெனில் அவன் பழனிஎம்பதி  பாலகரின் பகைவன் அன்றோ? .ஆம் மதி கெட்டுசொல்லவில்லை மதி பெற்று செப்புகிறான் இந்த சொற்களை. கோர யுத்தம் நடக்கும் பொழுதில் மாயை பெற்ற சூரன் மாயனாய்  மாறி பல ரூபம்  கொண்டு அலைகளித்தபோது அத்தனையும் வென்ற கந்தவேல் சிறிது நேரம் அவன் சிந்தையில் நின்ற அகந்தையை அகற்ற அவன் உள்ள, உருகியது குமரனின் கோலவடிவு கண்டு.திருவடி முதல் திருமுக அழகு காண பலஊழி காலமும் காணாதே என கசிந்துருகி நின்றான்.
சூழுதல் வேண்டுந் தாள்கள் 
தொழுதிடல் வேண்டும் அங்கை 
தாழுதல் வேண்டுஞ் சென்னி 
துதித்திடல் வேண்டுந் தாலு 
ஆழுதல் வேண்டுந் 
தீமை அகன்றுநான் இவற்கா ளாகி 
வாழுதல் வேண்டும் 
                         என்றும் வாயார வாழ்த்தி நின்றான்.பின்னர் கந்தக்கடவுள் விஸ்வரூப தரிசனம் முடித்து வேலும் மயிலும் என அகாரம் குறுக்கி அழகனாய் நின்று இருக்க  அவனது சிந்தையும் குறுகி சினம் கொண்டது.பின்னர் கொக்கரித்து மரமாகி சூர சம்ஹாரமாகி சேவலும் கொடியும் ஆனான்.தமை எதிர்த்து நின்ற அரக்கனையே சத் புத்தி அளித்து தன பக்தனாய் கந்தன் மாற்றுவான் எனில் பரம்பரையாய் அவன் அடிமை பூண்ட சுப்பன் குடும்பத்தை காணாது விடுவானோ, தன கடைக்கண் கருணை பார்வை பார்க்க திரண்டது சொந்தங்கள் மருண்டது அம்மைநகர்.காவடி எனும் பெரும் நிகழ்வை விரித்து கூற வேறு வழியின்றி அதன் மேன்மை உணர்த்த  கச்சியப்பரையும்,
அருணகிரியாரையும் அதன் உரை கொடுத்த வாரியாரையும் துணை கொண்டு அவரிடம் இருந்து தீந்தமிழ் கடவுளுக்காய் புகழ் பாட சில வரிகளை கடனாக பெற்றேன்.
                       வீதி வழி  ஓடிவரும் பிள்ளை சிறிதே அன்னை அன்னைமடி அமர்ந்து ஆசுவாசம் பெற்று அடுத்த அடி ஆர்வமாய் விரைவதை போல்,நாயகர் தெருவழியாய் கடந்து வந்த காவடி அம்மைநகர்  மங்கையரின் குங்குமத்திற்கு ஆதரவாய் என்றும் அவர் தம் கூக்குரலுக்கு குறை தவிர்க்க விரைந்து வரும் மாரியம்மன் ஆலயம் வந்து சேர்ந்தது.சக்தி காவடி தூக்கி வந்தவளுக்கு சன்னதமாய் அந்த அம்பிகை வந்து இறங்க அதனுடனே அனைவரும் சேர்ந்து ஆடி மகிழ்ந்து அதன்பின் ஆலயத்தில் தீப ஒளியில் அன்னையின் முகம் கண்டு அகம் மகிழ்ந்து அடுத்து அவள் மூத்த மகன் சன்னதியில் வரிசையாய் நின்று வந்தனம் செய்தது
                                 வீதி வலம்  வர வர வந்த காவடிகள் எல்லாம் இன்னும்,இன்னும் உரமேறி.முறுக்கேறி முன்னேறி கொண்டிருந்தது. காவடிகள் தூக்கிய தோள்கள் உயர்த்தி பிடித்து உள்ளமதில் உவகை கொண்டு ஊர்விளையாடும் பொழுது, அவரவர் இருந்த நிலை, புவியில் இப்படி ஒரு இடமா, சுயமாய்  வந்தவை தானா எல்லாம் அல்லது ஒருவன் தொடுத்துவிட்ட அம்புகள் தாமா, சோதனைக்கு உள்ளான  அன்பர்களுக்கு  எல்லாம் அருளும் விதமாய் அவரவர் இதயக்கமலத்தில் இருள் அகற்றும் சோதியாய், கடந்தவற்றை கடக்க வைக்கும் கடம்பனாய் ,அதப் பொழுதில் அவனன்றி வேறொன்றும் இல்லை என்பதை உணர்த்தி நிற்கும்  ஆதி குருவாய்,அன்பர்களை தம் திருவடியில் இணைத்து கொண்டு காவடியை செலுத்தி நின்றான்.
                                  காவடியை சுமந்த நெஞ்சம் நின்ற நிலை சொல்லில் வடிக்க இயலாது செழுமை பெற்ற எம் தமிழ் மொழியும் பக்தி பரவச நிலை உணர்த்துமோ அறியேன் நான்..வயிற்றில் இருந்து புறப்படும் பரவசம்,அன்னை வயிற்றில் தானே உதித்தோம் என்பதை சூசகமாய் சொல்லுமோ,பிசைந்து,புரட்டி பக்திக்கு ஒரு வடிவம் கொடுக்க  
முயல்வதை போன்ற ஒரு பிரமை,புறப்பட்ட உணர்வு அது மேலே உந்தப்பட்டு உணர்ச்சி பெருக்காகி நெஞ்சில் குடி கொண்டு வியாபித்து இருக்கும் நேரம் என் பழவினையும் தோய்ந்து  பண்டிதனே உன்னை கண்டுகொண்டேனோ என பரிதவித்து நிற்கும். பரவசம் வியாபித்து  நின்ற நெஞ்சமது விம்மி, கண்டத்தில் குடி கொண்டு கந்தா என
கதறத்  துடிக்கும். அந்நேரம் வரும் ஆவேசம் சிலர்க்கு ஆவி துடிக்க வெளியேற,பலரோ வாய் மூடி ஊமையாய் கண்ணில் தாரையாய் கண்ணீர் மல்க கரைந்து விடுவார்கள்.
வாயால் வாழ்த்து கூறி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு,கண்ணீர் பெருகி தன் கரையெல்லாம் துடைத்து விட,எல்லா கட்டும் அறுந்து உல்லாசமாய் ஓர் ஆட்டம் ,உவகையில்  ஓர் ஆட்டம்.உன்னிடம் சொல்லி விட்டேன் என் பக்தியினை,
நினை நினைந்துருகும் பக்தியின் அருமையையும் கண்டு இன்புறுகிறேன் எனும் ஆனந்த நிலை.இறைவா இப்படியே எமை உன்னிடம் அடிமை பூன  விட்டு விடு என அந்தரங்கம் கதற,வீதிகள் கண்ணில் கருத்தினில் படாமலே முன்னேறியது  முருகன் காவடி கருப்பன் சன்னதி நோக்கி.

                              

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-20

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-20

அதல சேட னாராட அகில மேரு மீதாட
    அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.-திருபுகழ் 
                                       
                                அம்மைநகர் வீதியில் அசைந்து வந்த காவடி அதை அன்றே அருணகிரி நாதர் திருவண்ணாமலை மன்னன் பிரபுட தேவ க்காய் வேண்டி விரும்பி கந்தனை அழைத்த  முறையில் நமக்காய் பாடிவைத்தார் போலும்,பக்தர்கள் மனமுருக அழைத்தவுடன் வரும்மருகோனேஇன்று உமை கூத்தாடி அழைகின்றோம் நீரும் எமுடன் ஆடிவரும்,அன்று போலே அதலம் எனும் பாற்கடலில் இருக்கும் சேடனார்  ஆன  ஆதிசேசன் ஆடவும்,இந்த அகிலத்தில் உள்ள மேருமலை ஆடவும் ,அபிநயத்தின் நாயகியாம் எங்கள் ஆதிசக்தி காளியாக  மாறி களி  நடனம் ஆட, அவளோடு என்றும் பிரியா பாகம் கொண்ட எந்தை விந்தையாய் வாதாட என உர்தவ தாண்டவம் ஆட விடைமேலேறி வர,அவரோடு பூதகணங்களும் மகிழ்ந்தாடி ஆடிவர,  கமலத்தில் அமரும்பிரமனும்,அவர் தம் நாயகி மதுரவாணி சரஸ்வதி இசைத்தபடி ஆடிவர, வானில் உள்ள தேவரெல்லாம் உவந்து ஆடிவர, எம் பெருமான் தலை சூடிய பிறையும் ஆடிவர ,வேலவன் மாமியாம் மகாலக்ஷ்மி ஆடிவர, அவர் தம் நாயகராம்,முருகரின் நெடிய  மாமன் ஆடிவர  மயிலேறி முருகா நீயும்  எம் முடன் ஆடிவரவேண்டும்.
                                                     அம்மைநகர் வீதியிலே ரயில் பாதை அடியினிலே மேளம் கொட்டி,நாதம் முழங்க பாட்டன் சுப்பனின் பரம்பரை ஆடிவர ஆரோகணம் ஆனது ஆனந்த காவடி.எங்குல வாரிசுகளாம் குறு மலர்கள் கையில் வேலும்,மயிலும்,சேவலும் 
முருகும் ,ஓம் எனும் மந்திரமும் கொண்ட கொடிகள் பிடித்து வர அவர் பின்னே மத்தளம் மேளம் கொட்டி முழங்கி ஓம்கார நாயகன் உயர் புகழை  இசைத்தபடி நாதஇசையும் இணைந்து ஆடி வந்தது.
                                            கொட்டு கொட்டி கூத்தாடி மகிழ்ந்து கூத்தன் மைந்தன் குண கானம் பாடுவோம்,அவன் அருள் வேண்டி தனை மறந்து தெருவில் மகிழ்ந்து நெகிழ்ந்து ஆடுவோம்.காவடி சுமந்து வரும் பக்தர் பின்னே வர, அவரின் முன்னே முருகனின் பக்தியில் உன்மத்தம் பிடித்து இப்பிறப்பில் தமை பிடித்த பதவி,புகழ் ,பெயர் எனும் மாயைகளை விடுத்து மயிலேறி விளையாடும் வள்ளி மணாளன் காவடி ஆடிவரும் ஊர்விளையட்டில் ஒயிலாட்டம் ஆடிவந்த மாமன்,மருமகன்,மைத்துனன் என்று விதமாய் உறவுமுறை கொண்ட சுப்பையாவின் வாரிசுகளை அம்மை நகர் வீதி எல்லாம் வியந்து நோக்கியது.இவர் தம் ஆட்டத்தில் ஆ றுமுக கடவுளுக்கான ஆனந்தம்,
பஞ்சாமிர்த பிரியனுக்கான பரவசம், தெய்வானை தேவருக்கான தெய்வீகம் ,தீந்தமிழ் கடவுளுக்கான திவ்யரசம் என கந்தராட்டம் கொடுக்க வந்த காவடி நாயக்கர் தெரு வழியாய் தன் சீரோட்டத்தை நடத்தியது.
                                             மாபாரதப் போரில் அதர்மம் கொன்று தர்மம் வென்று தாரணி நலம் காக்கவென கதை தூக்கி வந்த வீமன் போல் நாங்களும் காவடி எனும் கந்தன் கணையை தூக்கி கால் கவ்விய கர்மவினைகள் களைய வந்தோம். காண்டீபன் தொடுத்த அம்புகள் அநீதி கொண்ட மாந்தரின் பகைமுடித்து சிதறடித்தது போல் எம் பால் எதிர்வரும் இன்னல்களை கதறடிக்க வந்தது கந்தனின் காவடி.
                                               பிருந்தாவனம் மேய்ந்த மாடுகளை ஒன்றாய் கூட்ட புல்லங்குழல் இசைத்து ஒன்றிணைத்த உன் மாமன் போல் ஊரெல்லாம் பரவி நின்ற எம் சொந்தங்களை ஓர் அணியில் திரட்டி உன் காவடி சுமக்க பெரும் பாக்கியம் தந்த பெருமானே உன் கழல் சரண்.என சரணம் சொல்லி சரங்கள் போலே இருவீதி கடந்து மாரியாய் வந்து மக்களை காத்திடும்  ஆதிபராசக்தி தாய் முத்துரத்தினம் குலக்கொடிகள் மங்கலம் சிறக்க வாழ்த்துரைக்கும் அன்னை மாரியம்மன் ஆலயம் வந்து சேர்ந்தது சிங்காரவேலர் காவடி.




 

Tuesday, 19 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-19

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-19

அம்மை நகர் வீதியிலே ஆட வந்த காவடி 
ஆறுமுகம் பெயர் சொல்லி பாட வந்த காவடி 
இன்னல்களை அகற்றும் அழகன் அவன் காவடி 
ஈராறு விழிகளினால் காக்கும் கந்தன் காவடி 
உறகசயன மருகோனின் உயர்ந்த பால் காவடி 
ஊர்விளையாடிவந்த முருகோனின்  காவடி 
 எங்கள் குலம் காக்கும் கருப்பன் அவன் காவடி 
ஏறுமயில்  ஏறிவரும் முத்தையன் காவடி 
ஐங்கரனின் அருளோடு சீர் ஆடிவந்த காவடி
ஒற்றுமையாய் சுப்பன் குலம் எடுத்து வந்த  காவடி 
ஓங்கி வான் அளந்து வந்த ஒய்யார சக்தி அவள்  காவடி 
ஒளசதமாய்  ஆனா அருமருந்து அப்பன் அவன் காவடி.
காவடியாம் காவடி கந்தவேலன் காவடி 

                                                     வேல் வேல் வெற்றி வேல் என கோசம் கொண்டு வீறு கொண்டு நெற்றியில் திருநீறு கொண்டு ,அழகனே.முருகனே எம் அப்பனே எமை ஆட்கொண்டு அருள்வாய் ஆனந்தனே என்று அழுது  அரற்றி அவன் நாமம் போற்றி புறப்பட்டது காவடி முருகன் இல்லம் விட்டு.
                                        குடும்பமே விரதம் பூண்டு பாட்டன்  முதல் பெயரன் வரை, பாட்டி முதல் பேத்தி வரை வயது வித்யாசம் இன்றி வினை அறுக்கும் எங்கள்  கந்தவேலை மனதில் கொண்டு பதின் நாட்கள் கொண்ட விரதம் ,சங்கல்பம்,கட்டிய கங்கணம் எல்லாம் இந்த தருணம்  எதிர்நோக்கியே. தம் தோள்களில் காவடி சுமப்பவர் ,அவரை தாங்கி பிடிப்பவர், வேலும்,மயிலும் கொடியாய் பிடித்து முன்னே கட்டியம் கூறி நடப்பவர் மேளம் கொட்டி,வாத்தியம் இசைக்க காவடி முன்  மெய்மறந்து ஆடுபவர் ,என எவ்விதம் அவர் அவர் செயல் இருந்தாலும் மனதில் கந்தன் கருணை வேண்டியே வீதிவலம் வந்தது காவடி.
                                      பதிவிசாய் வந்த பாலமுருகன் காவடி,பக்தியுடன் வந்த பரம்பரை காவடி,உற்சாகம் கொண்டு ஓடிவந்த காவடி,கண்ணீர் மல்கி கரைந்து வந்த காவடி ,ஆவேசமாய் அரற்றி வந்த காவடி,மானசீகமாய் மகிழ்ந்து வந்த காவடி,கோபாவேசமாய் குதித்து வந்த காவடி,குறை தவிர் முருகா  என உருகி வந்த காவடி, கூத்தாடி வந்த பித்தன் அவன் காவடி,பரவசம் அடைந்து வந்த பராசக்தி காவடி, மணிகள் குலுங்க வந்த மாமன் அவன் காவடி,சுற்றி சுழற்றி சுழண்டு வந்த பகவதியின் காவடி,உடன்பிறப்பாய் வந்த மதுரைவீரன் காவடிநிறைகுடமாய் மங்கையர் சிரம் ஏறிய  காவடி ,சிரித்து மகிழ்ந்து வந்த சிங்கார காவடி என அகங்காரம் விடுத்து,ஆனந்தத்தை அணியாக பூண்டு கெட்டி மேளம் செந்திலாண்டவர் சிந்து புகழ் பாட புறப்பட்டது சுப்பன் காவடி. 





                                   அழகன் முருகன் அவன் அருளினால்,பாட்டன் சுப்பன் அவன் பார்வையில் பாந்தமாய் அமைந்தது அம்மைநகர் பூமியில் எழில் முருகன் இல்லம். அங்கிருந்து ஆடிவரும் ஆறுமுகன் காவடி . நந்திஎம்பெருமான் மத்தளம் தரை இரங்கி வந்து எங்களுக்கு வாழ்த்தொலி  பறைந்து  நின்றதோ . சேனை நடத்தி சென்ற வீரபாகு தேவர் தான் இன்று எங்கள் வழி நடத்தி சென்றாரோ, முதல் காவடி ஏந்தி நின்ற இடும்பரும் எங்கள்  உடன் மகிழ்ந்து வந்தாரோ, சுட்டெரித்த சூரியர் இன்று சுகந்த ஒளி தந்து நிற்கின்றார்,அகம் மகிழ்ந்த வாயுதேவனும் சாமரம் வீசி வருகின்றார், நீறு கொண்ட வருண னோ நேற்றே வீதியெல்லாம் குளிர்வித்து சென்றாரே , நிலம் தனில் குடிகொண்ட அக்னியும் மறைந்து நின்று மகிழ்கின்றார் இதை எல்லாம் தூர இருந்து பார்க்கும் வளியோ தானே இந்த சுப்பன்  காவடிக்கு சாட்சியாக மாறினான்.
                                   அம்மைநகர்  தெருவெல்லாம் இந்த காவடி வலம் வந்த புகழ் பாடும் முழுமையாய் முடிப்பதற்கு இந்த பகுதி ஒன்று தேறுமோ. புறப்பட்டகாவடி கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கந்தனின் தனையன் அயனின் மந்திரம் சொல்லி முன்னேறியது தார்சாலை நோக்கி. 
                                   தார் சாலை வந்தடைந்த காவடி பறக்கும் புகைவண்டி செல்லும் பாதையின்  அகத்தே இருந்த கீழ்  பாலம் வழியாக விரைந்தது. வீர முழக்கத்துடன்.
                                  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 
                                             வீரவேல் குமரனுக்கு அரோகரா 






Monday, 18 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-18

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-18


                                              கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முருகப் பெருமான் திகடச்சக்கர என்று ஆனைமுகன் துதி சொல்லி
வாக்கெடுத்து கொடுத்து கவிபுனைய அருள் புரிந்தார். அவ்வண்ணமே அவர் தம் அப்பன் புகழ் பாட முனைந்த சேக்கிழார்  பெம்மானுக்கு உலகெலாம் என்று அடி எடுத்து கொடுத்து எம் ஆவுடை அமர்ந்த அப்பன் அடியெடுத்துக் கொடுதது திருத் தொண்டர் புராணம் வரைய வைத்தார். தம் திருவிளையாடற் மட்டும் உலகம் அறிந்தால் போதுமானது அன்று என்று எம் அப்பன் நினைத்ததனால் உருவான புராணம் திருத்தொண்டர் புராணம். வாழ்வின் இலக்கு பக்தி செய்தல் எனும் பேருண்மையை உலகினுக்கு எடுத்துரைக்க அவனால் மேம்பாடு அடைந்த மேன்மக்களை பற்றி எடுத்துரைக்க மற்றும் சில ஆன்மாக்களை அனுபிவிட்டான்.
                                             பக்தி செய்தல் என்பது தன்னை மறந்து தலைவனை நினைந்து தன்னலம் இல்லாமல் தன்  சுகம் பேணாமல் தாளாத உறுதியுடன் அவன் பாதம் சேர்த்தல் என்றால், அத்தகு பக்தியை வரமாய் பெற நமக்குஆண்டவன்  கட்டளை வேண்டும்.ஆதியை அடைய ஆன்மாக்களுக்கு அவன் அருளும்,அவன் அருளால் அவனை வணங்க நமை நடத்தி செல்ல மேன்மை கொண்ட முன்னோரும் வேண்டும். குருவருள் இன்றி குன்றம் ஏறி கொடி  நாட்ட முடியாது அவ்வாறான ஞான குருவாக நமக்கு கண்ணால்  காணாவிடினும் நம் ஆத்மா ஞானத்தில் நிறைந்து அருள் புரியும் பாட்டனை பெற்றது நம் தவப்பயனே. 
                                                பக்தி என்பதை மனத்தால் உணர்ந்து வாக்காய் வடித்து செயலால் செய்து வெளிக்கொணரலாம்.நம்மோடு வைத்திருந்த பக்தி மனம் பதிகம்,பாட்டாய் கமழ்ந்து ஆடி பாடி ஆண்டவனை அடையும் போது  அதை செய்பவர் அன்றி காண்போரையும் கட்டுண்டு  பக்தி செய்யத் தூண்டும்.அவ்வாறான ஒரு நிகழ்வு நம்மை ஆட்சி செய்து நமை சார்ந்தவறையும் ஆட்கொண்டது எனில் அது காவடி திருவிழா என்பதில் ஐயம் இல்லை.அந்த உணர்வு பொங்கிய தமை மறந்த நிலை எழுத்தில் வடிக்க எவ்வளவு தூரம் இயலும் என்பதையும்  நம் பாட்டன் வசம் இத்தருணத்தில் மனதார ஒப்படைக்கிறேன்.
    கவின்மிகு காவடிகள் கந்தவேல் காவடிகள் 
       சேந்தன் காவடிகள் செந்தில் வேல் காவடிகள் 
                   காங்கேயன் காவடிகள் கார்த்திகேயன் காவடிகள் 
                முருகவேல்  காவடிகள் முத்தையன் காவடிகள் 
                     கருணை வேல் காவடிகள் கருப்பையன் காவடிகள் 
                     சுப்பையன்  காவடிகள் சூர சம்ஹார  காவடிகள் 
                        மால் மருகன் காவடிகள் மதுரை வீரன் காவடிகள் 
                          முத்து முத்தான ஈசன் மைந்தனின் பால் காவடிகள் 

                                      அணிவகுத்து நின்றன அம்மைநகர் வலம் வர, தண்டாயுத பாணி நடு நாயகமாய்  வீற்றிருக்க இருபுறமும் எழில்  காவடிகள். இத்தனை நாள் செய்த தவம் எய்தும் தருணம் வந்தது. கந்தவேல் மந்திரத்துடன்,கருப்பன் அவன் மந்திரம் சொல்லி கருப்பையாவால்  செந்தில்வேல் சிரத்தில் அபிசேகம் செய்விக்க சிறு சொம்பில் பால் சேர்த்து சிக்கெனவே சிவன் பாதம் பிடித்தார் போல் சீரியமுறையில் கந்தக்காவடியில் பால்சொம்பு கட்டப்பட்டது.ஓம் சரவண பவ என்று சொல்லி செம்பில் பால் வார்த்து சுமந்து வரும் செல்வங்களை காப்பாற்று எனவும், ஓம் நமசிவாய என்ற ஓம்காரன் பெயர் சொல்லி ஓடிவரும் நின் பக்தர்களை காத்து நில் என்றும் பால் காவடிகள் பக்குவமாய் கட்டப்பட்டது.வீரவேல்,வெற்றிவேல் என சொல்லி வில்லில்  இருந்து வரும் அம்பு போலே சொல்லில் இருந்து வரும் சுவை போலே முருகன்  இல்லம் விட்டு அம்மைநகர் வீதி வலம்  வர, எங்கள் பாட்டன் அவன் பெயர் நிலை நாட்ட, கனி கொடுத்து மகிழ்வித்த குடும்பம் இன்று காவடி கொண்டு காவியம் படைக்க வென்று, வினை முடித்து வென்று அன்று ஆண்ட எங்கள்  பாட்டன் சுப்பன் நாமம் சிறக்கவென காவடிகள் தயாராய் நின்றன.
                                                    முருகன் இல்லம் முற்றம் அது முற்றும் அப்பன் அவன் திருவருளால் நிறைந்திருந்தது. பூக்கள்  மாரி போல் பொழிய செய்து எங்கள் பழனியம் பதியை குளிர செய்து  சந்தானம்,சவ்வாது மணக்க, பால் காவடி,சந்தன காவடி கொடுமுடி நீர்காவடி, பாலன் அவன் பதுமை காவடி  என என்குலமே ஒன்றிணைந்து ஓம் காரம் கூவி, தீப ஒளி  கூட்டி, தீஞ்சுடர்  நாயகன் தீந்தமிழ் கடவுள் முருக  பெருமானின் காவடியை சிரத்தில்  தூக்க நின்ற தருணம். தாரை தாரையாய் கண்ணீர், நிலை கொள்ளாத தவிப்பு,தேகம் சிலிர்க்கும் அருள், மேனி முறுக்கி நின்ற கருப்பன், கதறி துடித்த சக்தி, முறைத்து நின்ற முத்தையன், மருகி நின்ற வீரன், உல்லாசமாய் உரக்க சிரித்து நின்ற காளி அதனையும் ஓரிடத்தில் அம்மைநகர் அகமதனில். 
                                                     வயதில் சிறியவர் முதல் காவடி பச்சை பட்டை உடுத்தி நின்ற என் மைந்தன் ஸ்ரீராமனுக்கு இராமன் வம்சம் சார்பாய் முத்துக்குமரர் கரங்களினால் மாவடியானும்,அங்கயற்கண் அம்மையும் எடுத்து தர பாலகன் முகமும் பார்த்தவர் முகமும் மிளிர்ந்தன .வரிசை வரிசையென அழகு காவடிகள் கங்கணம் கட்டி காத்து இருந்தோர் தோள்  சேர ஒவ்வன்றும் ஓர் கந்தன் கருணையினை சொல்லும்.ஸ்ரீ ராமன் முதல் அவன் தாத்தா வரை வயது வாரியாய் நம் குல மூத்தோர் முறையாய் விரதம் ஏற்றோர் தோள்களில் காவடியை ஏற்றிவிட ஒவ்வரு காவடியும் சுமந்தோர் தம் பக்தி ஸ்ரத்தை சிறக்க பாந்தமாய் பரமன் மகன் காவடியை தோள்களிலும்,அவன் பக்தி உணர்வை சிந்தையிலும் தாங்கி, உணர்ச்சி பெருகி,உள்ளம் உருகி ,உவந்து,மகிழ்ந்து ,உளமார சுமந்தனர்.
                    வாய் விட்டு கதறி,மனம் விட்டு மகிழ்ந்து,மத்தியில் கந்தனை நிறைத்து, கண்ணீர் பெருகி ,அண்டம் அதிர வந்த வீரபத்திரர் போலே பார்த்திபன் அவன் ஆடி வர, கூவி கதறி ஆதிசக்தியாய்  நாரி
சதங்கையுடன்நடந்துமகிழ்ந்து வர,கருப்பனும்,முத்தையனும் ,மதுரைவீரனும்,பகவதியும் அருளோடு துணைவர ஆரம்பம் ஆனது அம்மைநகர் ஆலயங்கள் சுற்ற புறப்பட்ட காவடி வீதி உலா.