Sunday, 22 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16

                 திருவிளையாடற் புராணம் செய்த பரஞ்சோதி மாமுனிவர் ஆற்று சிறப்பை சொல்லும் போது  ஒரு பாடல் வரும்
                               
                               ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
     ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
இறைவியே இந்த இயற்கையாய் அமைந்தவள்.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை சிவனாரின் கிரியா சக்தியாய்  நின்று புரிபவள்.அது போலே அவளே,ஆறு,குளம்,கிணறு,அருவி,கடல் என பெயர் கொண்டு இந்த பயிர்களை எல்லாம் வளர்ப்பதும் அவளே என்பார்.
                          மேற் கூறிய இந்த நீர் நிலைகள் எல்லாம் அன்னையின் சொருபம் எனில் அதிலும் சிறப்பு கொண்ட புண்ணிய நதி தீர்த்தங்களில் இருந்து வந்து சேர்ந்தது தீர்த்தங்கள் நிரனின் தீர்த்த காவடிக்கு.
                         ஆம் அதில் சேர்க்கப்பட்ட தீர்த்தங்கள்... அருவியாய் அன்னை உருவாகும் சுருளி தீர்த்தம்.ஆறாக  அவள் பிரவாகிக்கும் கொடுமுடி காவிரி தீர்த்தம்,மானசொரோவரில் இருந்து உலகின் எல்லா பாவத்தையும் போக்க புறப்பட்ட கங்கை தீர்த்தம். அழகர் மலியானும்,அவன் மருகன் முருகப் பெருமானும் குடிகொண்ட அழகர் மலை கிணற்று தீர்த்தம்,சைவ,வைணவ ஒற்றுமையை உலகினுக்கு பறை சாற்றி,பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாய் பகவான் ராமரால்,அமைக்கப்பட்ட லிங்கமாய் எம் அப்பன் வீற்று இருக்கும் இராமேஸ்வரம் கடல் தீர்த்தம்.அதையும் தாண்டி வாசுதேவ குடும்பானாம் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு பொருளாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்று முகமதிய நாட்டில் இருந்து வந்து சேர்ந்த மெக்கா  புனித நீர் என்று ஐவகை தீர்த்தங்களும் அம்சமாய் இடம் பிடித்தது, அருமை பாலகன் என் சகோதரி நித்யா பெற்ற செல்வன் நிரனின் காவடியில்.
                           பழநியம்பதி வாழ் சிவகுமரனுக்காய் எடுத்து செல்லும் இந்த காவடியை சுமக்கும் சிவகுமாரின் பெயரனுக்காய்  அந்த காவடியை
 உருவாக்கியது அவன் தாத்தாக்கள். இடும்பன் சுமந்த காவடி போல் ஒரு கம்பில் இருபுறமும் துலாபாரம் போல் சொம்பை கட்டி
உருவாக்கினார்கள்.  நிரனின் தீர்த்த காவடி எடுக்கும் முடிவு பின்னரே உருவானது, ஆகவே அவருக்கான செம்பினை வாங்க நானும் என்னவரும் அந்த வியாழன் அன்று சென்றோம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு.அன்று மீனாட்சியை வழிபட்ட பின்னர்,புதுமண்டபம் சென்று இதை வாங்கிய பின்னே,பைரவரை காண பேராவல் பிறக்க,எழுகடல் தெருவில் உள்ள பைரவரை வணங்க சென்றோம். அங்கே அது ஒரு அஷ்டமி தினம் ஆகையால் பூஜை புனஷ்காரம் என்று எல்லாவற்றையும் ஏற்று திருப்தியாய் தரிசனம் தந்தார் பைரவர். அதன் பின் வடக்கு கோபுர வாசல் வழியே நடந்து வந்தால் அங்கே  மொட்ட கோபுரம் முன்னே முனீஸ்வரர் வழிபாடு முடித்து திரும்பினோம் .
                 ஒரு தெய்வீக நிகழ்வு நடக்கும் தருவாய் ஒரு மிகப்பெரிய குடும்பமே கூடவேண்டும் எனும் போது ,எத்தனை விஷயங்கள் கணக்கில் எடுக்க வேண்டியது உள்ளது.ஊர் கூடினால் தேர் இழுக்கலாம். குடும்பம் கூடினால் சாத்தியமற்ற செயல்களும் சாத்தியப்படும்.அதுவும் நமக்கு முன்னே செல்ல நமது முன்னோரும்,குலதெய்வமும் துணை நிற்கையில் கந்தன் காவடியும் அவன் பாதம் சேர்ந்தது தங்கு தடையின்றி.
                
                அடுத்து பால் காவடிக்கு பால் வேண்டும்.அதுவும் பாலமுருகன் தானே அருள வேண்டும்.சனி கிழமையும் வந்து விட்டது எங்கே அவன் அனுப்பும் செய்தி ,அதற்க்கு முன்னே எடுத்த காவடிக்கு கனவில் வந்து செய்தி சொன்ன கந்தன் இன்னும் வழிவகை  காட்ட வில்லையே என ஏங்கி  நிற்கையில், மூர்த்தி சித்தப்பா தன சிந்தையில் தோன்றி கந்தன் தந்த செய்தி என முத்து என்ற பெயர் கொண்டு யாரேனும் பசு வைத்திருந்தால் அந்த பசு இதற்க்கு ஏற்றது என உரைக்க. அம்மைநகரை அடுத்த செட்டியப்பட்டியில் இருந்தது அந்த பசு. செல்வராஜ் மாமா சென்று விசாரிக்கையில் முத்து என்ற பெண்மணியிடம் ஒரு மாடு இருப்பதாக வந்தது தகவல். அதிலும் ஒரு விசேசம், இன்று முருகன் இல்லம் குடிகொண்டு இருக்கும் இடத்தில் தான் முன்னே அந்த பசு மேய்ந்து கொண்டு இருக்குமாம். முத்துகுமரனின் முடியை குளிர்விக்க நாம் எடுத்து செல்ல இருந்த பால் காவடிக்கு பாலும் வந்து சேரும்.
                 காவடிகள் 17 அதில் கொடுமுடி தீர்த்தகாவடி ஒன்று,நிரனின் தீர்த்த காவடி ஒன்று ,மற்றொன்று ரேவதி அத்தாசியின் சந்தன காவடி.ஆகவே மீதம் இருக்கும் 14 காவடிக்கும் பால் வேண்டும் அதற்காய் இனொரு பசு மாதவன் சித்தப்பாவால் தருவிக்கப்பட்டது. அதன் விசேசம் அந்த பசு கன்று ஈன்றது தை பூசத்தில். கிருபானந்த வாரியார் சொற்களில் சொல்ல வேண்டுமானால், எம் அப்பன் முருகப்பெருமானின் லீலைகள் அளப்பரியது. அவனின் காவடி தின லீலைகளை அடுத்த பதிவில் காண்போம்.
                                  ஆறுமுக வேலனுக்கு அரகரோகர! 
                                  பார்வதியாள் பாலனுக்கு அரகரோகர!


Saturday, 21 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

                                  மே மாதம் 2014 ஆம் ஆண்டு,24 ஆம் தேதி இனிய காலை பொழுது புலர்ந்தது ,முந்தைய இரவின் பலத்த காற்று,இடி,மின்னல்,மழை இவற்றின் சுவடுகள் சிலவற்றை மட்டும் நமக்கு உணர்த்திக்கொண்டு.முதல் நாள் இயற்க்கை காட்டிய விளையாட்டால் மின்சாரம் சில பிரச்சனைகள் தர,வீட்டின் மேலே போட்டிருந்த கொட்டகை ஆட்டம் காண என சிற்சில பிரச்சனைகள் நடந்தேறியது.முதல் நாள் வரை கடுமையாய் இருந்த அக்னி நட்சத்திர வெயில் அன்று சற்றே தணிந்தது.
                                
                                   ஓரிடத்தில் இருந்து விதையாய் தோன்றிய மரங்கள் பதியம் இடப்பட்டு வெவேறு இடத்தில் வேரோடும் அதுபோலே,ஒரு கூட்டில் ஜனனம் கொண்ட பறவைகள் சிறகு முளைத்து தன் குடும்பம் அமைக்க வெவ்வேறு திசை பறக்கும்.அந்த பறவைகள் எல்லாம் பாசப் பறவைகளாய்,பக்தி பறவைகளாய் மாறி,ஆதாரமாய் நின்ற அம்மைநகர் கூடு தேடி வர ஆரம்பித்தது.முருகன் அருள் கொண்ட இல்லம் கலை கட்ட தொடங்கியது.

                                  காலை பூஜை காவடிக்கு கடவுள் வாழ்த்தோடு சொல்லி ,சிற்றுண்டி முடித்து சீக்கிரமே அமர்ந்தோம் ,காவி உடை தரித்த காவடிகளுக்கு,கலையழகு கொண்ட வண்ணமிகு மயில் தோகை பீலி கொண்டு அலங்கரிக்க.மயூரின் பீலியை வகை வாரியாய் பிரித்தெடுத்து,வள்ளி மணவாளன் பெயர் சொல்லி சுமந்து செல்லும் பால் காவடிக்கு, கணம் சேர்த்தோம்.
                   
                            பழனி செல்லும் முன்னே பிள்ளையார் பட்டி பிள்ளையாரை தரிசிக்கவேண்டும் என்பது ராஜா மாமாவின் கொள்கை.அன்று அதிகாலை அண்ணன் தம்பியாய்  இணைந்து ஆறுமுகன்  சோதரனாம் ஆனைமுகனை வழிபட்டு வந்தார்கள்.
                       
                               கும்பகோனத்தார்  குலதெய்வ வழிபாடு ஒன்று மீதம் இருந்தது. பிறந்ததில் இருந்து எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் கோவில் சென்றதில்லை நானும் என் சோதரியும்.எனவே பின் காலை பொழுதினிலேஎன் ராஜேஷுடன் அம்மை நகர் அருகே உள்ள எத்திலோடு  என்னும் ஊரில் குடி கொண்ட என் அப்பன் வீட்டு குலதெய்வம் சீலைகாரியை வழிபட புறப்பட்டோம் சிறுகுழுவாய்.

                                 நிலக்கோட்டை அருகே குடிகொண்ட எம் பூர்வீக முன்னோர்கள் வாழ்ந்த பூமி அது. மூன்று தலைமுறை முன்னால் நேர்ந்த அசம்பாவிதம் ஒன்றின் காரணமாய் குலதெய்வ கோபத்திற்கு ஆளான குலம்  அது.சில மாதம்  முன்னே,கோவிலை எடுப்பிக்க ஆணை வந்தும் ,மெல்லவே கோவில் வேலைகள் முன்னேறும் கோவில் அது. இதை சொல்லும் காரணம், மனிதர்களின் அறியாமை காரணமாய் குலதெய்வமே கோவித்து ,சங்கடங்கள் பலவற்றை சந்தித்து வரும் சந்ததிகள் அங்குண்டு. 
அவனருளாலே அவன் தாழ் வணங்கி என்னும் கூற்றை மெய்பிக்கும் கோவில் அது. கூரை வீட்டில் குடிகொண்ட முன்னோர்கள் நம்மை காக்கும் தெய்வங்களாய் உருமாறி,மாரியம்மாவாய் நிற்கும் என்பதின் வடிவம் அந்த கோவில். முதலி விக்ன விநாயகர் தனி கருவறையில் தனித்திருக்க.சமயபுரம் மாரியும்,சீலைகாரியும் ஒரே சன்னதியில் அமர்ந்திருக்க,முன்னே அவள் அண்ணன் மதுரைவீரன் வீற்றருவாள் பிடித்து நிற்க, அடுத்த சன்னதியில் சோனை சாமி. இந்த வீட்டு கோவிலுக்கு மூன்று வாசல். எப்போதோ வரும் பங்காளிகள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு செல்வார்கள்.

                               நாங்கள் போன நேரம்,கோவில் எல்லா வழிகளும்,
திறக்கப்பட்டு, கழுவிடப்பட்டு ,பத்தி மனம் கமழ பக்தி மயமாய் இருந்தது. முன்னமே என் சகோதரன் சொல்லி யாரோ வந்து திறந்து வைத்திருந்தார் என நினைத்தோம்.ஆனால் அங்கு சென்ற பின்னே அங்கிருந்த அம்மா,மதுரையில் இருந்து வந்தது என்றும்,நீண்ட வருடங்கள் சென்று இன்று வந்து, சாமிகளுக்கு கைங்கர்யம் செய்ய வந்தது என்றும் அறிந்து அதிசயத்தில் மூழ்கினோம். பூஜை பொருட்கள் ஒவ்வரு தெய்வத்திற்கும் வாங்கி வந்ததை வைத்து,முறையாய் ராஜேஷை கொண்டே தீபாராதனை காண்பிக்க சொன்னார்கள் மாமா.மன நிறைவாய் கும்பிட்டு,இத்தனையும் செய்த அந்த அம்மைக்கும்,பிரசாதம் வைத்து கொடுத்தோம்.
   
                             இதுவரை சென்ற அனைவரின் குலதெய்வ கோவில்களிலும்,
அருள் வாக்கு சொல்ல ஆள் இருந்தது என்று நினைத்திருக்கும் போதே....
குலவை ஒலி  முழங்க சூடம் ஏற்றி காண்பிக்க சொல்லி அந்த அம்மா வடிவில் வந்து சமயபுரத்தாள் வாக்கு தந்தாள்.கலங்காதே மகனே காலம் வரும் உன் உடன் பிறப்பையும் வாழவைப்பேன்,என வாக்கு தந்தாள்.நல்ல ஆசி அதுவும் கோபம் கொண்ட குலதெய்வம்,மனமிரங்கி பொன்னடி மக்களுக்கு வாழ்த்து சொல்ல.கோடையிலும் குளிர்ந்து  எங்கள் மனம்.

                            மதிய உணவுக்குள் திரும்பிவிட்டோம் அம்மை நகர்.காவடியும்,காவி உடை,மயில் பீலி,என பக்குவமாய் பக்தி மயமாய் உருவாகி  உருவேறி கொண்டே இருந்தது. இரவினில் வெகுநேரம் வரை மணி கட்டும் செயலும்,தீய சக்திகள் அண்டாமல் பாது காக்க,
காக்க காக்க கனகவேல் காக்க என்ற மந்திர சொல்லுக்கு இணங்க எலுமிச்சை பழம் கட்டி,பலம் சேர்த்தோம்.
                              கொடுமுடி தீர்த்த காவடி விவரம் ஏற்கனவே அறிந்தோம்.இன்னும் ஒரு பாலகனின் தீர்த்த காவடி உருவானது மகவும் சிறப்பாக பால முருகனுக்காக.ஆம் அது அவ்வைக்கு சுட்ட பழம் தந்த தகப்பன் சாமியின் ஞானம் எல்லாம் பெற்று வந்த அமிர்தமான அன்னையின் மைந்தனுக்காக.நிரனுக்காக அமைந்ததது அருமையான காவடி.அதன் சிறப்பை ,சிறப்பாய்  அடுத்த பதிவில் காண்போம்.


பழனிமலை தண்டாயுத பாணிக்கு அரோகரா.
ஆவினன் குடி சிறக்கும் பாலனுக்கு அரோகரா.