Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-14. Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-14. Show all posts

Thursday, 13 November 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-14
                     
                           காவடி நிகழ்வு நடந்தேறி ஆறு மாத காலம் கழிந்தது,சென்ற பதிவிற்கும்,இந்த பதிவிற்கும் இருக்கும் இடைவெளியே மூன்று மாத காலம் ஆனது.ஆனாலும் இந்த அனுபவம் ஆனது பேரின்பம் தரும் ஆன்மீக அனுபவம்,நினைத்த மாத்திரத்தில் அன்று இருந்த அதே உணர்வு இன்றும் நம்மை ஆக்ரமிக்கும்,எனவே காலம் என்பது ஒரு பொருட்டாகாது .இறைவன் சித்தம் இன்று இது இவர் வழி  அரங்கேறும்  எனும் போது  அதன் பகிர்வதே நம் பாக்கியம் ஆகும்.

                          நம் வாழ்வில் நடக்கும் பல ஏற்றதாழ்வுகள்,இன்ப துன்பங்கள் நம்மில் பல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.நிகழ்வுகள் நிகழும் தருவாயில் அந்த அனுபவம் மட்டுமே நம்மை சார்ந்து அதன் உணர்வால் நாம் ஆக்கிரமிக்கப் படுகிறோம்.இவை அனைத்தும் தாண்டி வந்து திரும்பி அந்த நிகழ்வை பார்க்கும் போது ,அவை நிகழ்ந்தேறிய காரணமும்,காரியமும்,நமக்கு புலப்படும்.அந்த உண்மை நிலை நாம் அறிந்துகொள்ளும் வரையில் நாம் அவை தந்த துன்ப நிகழ்வில் உழன்று கொண்டே இருப்போம்.அதற்கான  சான்றாய் நின்று, அன்னையாய் அமர்ந்து நம் குடும்பங்களை காத்து நிற்கும் அற்புத அதிசயம் செண்பகவல்லி தாய் குடிகொண்ட மேலப்பசளையை வணங்க பார்த்திபனூர் கருப்பனிடம் இருந்து உங்களை அழைத்து செல்கிறேன்.

                       மேலப்பசளை,சிவகங்கை சீமையின் அழகிய ஓர் மண் மணம் மாறாத கிராமம்.இங்கே கடல் கடந்து பொருள் ஈட்டி ,அதைகொண்டு தன்  தாய் மண்ணில் மாளிகை  கட்டி மகராசனாய்  எங்கள் பாட்டையா இராமநாதபிள்ளை அவர்கள் ஆட்சி செய்த பூமி.அதன் அருமை பெருமைகளை எழுதும் அறிவும்,அனுபவமும்,எனக்கு வாய்க்கபபடவில்லை.ஆனால் நம் வீட்டு பெரியவர்கள் வாய்வழி வந்த செய்தியே அதன் மகத்துவத்தை உணர்த்தியது.
                           தசரதர்க்கு மஹாலட்சுமியே மருமகளாய் சீதாதேவி கிடைத்தார் போல் ,எங்கள் பாட்டையாவிற்கு கிடைத்த ஸ்ரீதேவி மருமகள் செண்பகவல்லி அன்னை.பிறந்த இடம்,புகுந்த இடம் இரண்டும் பெருமைப்படும் வண்ணம்,வாழ்ந்து மனிதரும் தெய்வமாகலாம் என்னும் உண்மையை உலகினுக்கு எடுத்துரைத்து மெய்யாய் 
அருள்பாலிக்கும் இறைவன் மலரடி செண்பகம் எங்கள் தாய்.
                          இந்த ஒரு பதிவை நான் எழுத ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்தது,பதிவை பூர்த்தி செய்ய இயலவில்லை. எதோ ஒரு காரணம் என்று தோன்றியது.என்னவென்று அறியவில்லை,அறியவும் முற்படவில்லை.ஆணை இன்று கிட்டியது என் மனதிற்கு இதோ இந்த மண்ணில் குடி கொண்ட எங்கள் அம்மாச்சி துணையுடன் தொடர்கிறேன்.
                       பசியோடு வரும் மகவின் பசியாற்றுபவளே அன்னை.அன்றும் பசித்துவந்த காவடி குழுவாம் தம் மக்களுக்கு தம் இருப்பிடத்தில் பசியாற்றினார்கள் செண்பகவல்லி அன்னை.ஆன்மீக தேடலில் அலைந்த தம் மக்களுக்கு,அமுதம் தந்து ஆசியும் தந்து காவடி இனிதே ஈடேற வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
                         பசலை விட்டு அழகிய மீனாட்சி அம்மன் கொலு வீற்றிருக்கும் மதுரை வழியாக அங்கு சிறிது சிரம பரிகாரம் செய்து அம்மைநகர் சென்று அடைந்தோம் அனைவரும்.
                      மாலை நேர  காவடி பூஜை பாட்டு,பஜனைகளுடன், அருளும்,அவன் தன குரலும் ஓங்கி ஒலிக்க பக்தி உணர்வும் ,பந்த உணர்வும் பொங்கி நிற்க தொடர்ந்தது காவடி வினோதங்கள்.
                    பக்தியுடன் நாம் படைத்த பா கேட்ட முருகன் தன் பக்தருக்கு உணவளித்து பெரும் சப்தத்துடன் இடியும் மழையையும் பரிசளித்தான்.
                  அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது எங்கள் மாமாவிற்கு, காவடி வழிபாட்டின் விசேஷ பூஜைக்காய் வாங்கிவைத்த தாமரை மலர்கள் நாகமலையில் தங்கிவிட்டது என்று. மழையும்,மின்னலும் மிரட்டும் வேளையில் எடுத்துவர தாம் செல்வதாக தம் வயதையும் மீறி மாமா சொல்ல ,அப்படி அனுப்பிவிட மாயவன் மருகனுக்கு மனம் வருமோ? அனுப்பிவிட்டான் தம் பெயர் கொண்ட முருகையாவை நாகமலை சென்று,திரும்பும் பயண திட்டத்தோடு.  உயிர்களுக்கு அளிக்கும் அன்னத்தில் அவர் தம் பெயர் இருக்கும் பட்சத்தில், அவனுக்கான மலர்கள் தாம் வந்து சேராதோ, அதுவும் வந்துவிட்டது மின்னல் ஒளியோடு.
                  
அடுத்த பதிவு அடுத்தடுத்து வர அழகுமயில் வாகனன் அருள் புரிய வேண்டி இதனை பதிவு செய்கிறேன்.
                 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
                 வீர வேல் குமரனுக்கு அரோகரா!