காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-20
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.-திருபுகழ்
அம்மைநகர் வீதியில் அசைந்து வந்த காவடி அதை அன்றே அருணகிரி நாதர் திருவண்ணாமலை மன்னன் பிரபுட தேவ க்காய் வேண்டி விரும்பி கந்தனை அழைத்த முறையில் நமக்காய் பாடிவைத்தார் போலும்,பக்தர்கள் மனமுருக அழைத்தவுடன் வரும்மருகோனேஇன்று உமை கூத்தாடி அழைகின்றோம் நீரும் எமுடன் ஆடிவரும்,அன்று போலே அதலம் எனும் பாற்கடலில் இருக்கும் சேடனார் ஆன ஆதிசேசன் ஆடவும்,இந்த அகிலத்தில் உள்ள மேருமலை ஆடவும் ,அபிநயத்தின் நாயகியாம் எங்கள் ஆதிசக்தி காளியாக மாறி களி நடனம் ஆட, அவளோடு என்றும் பிரியா பாகம் கொண்ட எந்தை விந்தையாய் வாதாட என உர்தவ தாண்டவம் ஆட விடைமேலேறி வர,அவரோடு பூதகணங்களும் மகிழ்ந்தாடி ஆடிவர, கமலத்தில் அமரும்பிரமனும்,அவர் தம் நாயகி மதுரவாணி சரஸ்வதி இசைத்தபடி ஆடிவர, வானில் உள்ள தேவரெல்லாம் உவந்து ஆடிவர, எம் பெருமான் தலை சூடிய பிறையும் ஆடிவர ,வேலவன் மாமியாம் மகாலக்ஷ்மி ஆடிவர, அவர் தம் நாயகராம்,முருகரின் நெடிய மாமன் ஆடிவர மயிலேறி முருகா நீயும் எம் முடன் ஆடிவரவேண்டும்.
அம்மைநகர் வீதியிலே ரயில் பாதை அடியினிலே மேளம் கொட்டி,நாதம் முழங்க பாட்டன் சுப்பனின் பரம்பரை ஆடிவர ஆரோகணம் ஆனது ஆனந்த காவடி.எங்குல வாரிசுகளாம் குறு மலர்கள் கையில் வேலும்,மயிலும்,சேவலும்
முருகும் ,ஓம் எனும் மந்திரமும் கொண்ட கொடிகள் பிடித்து வர அவர் பின்னே மத்தளம் மேளம் கொட்டி முழங்கி ஓம்கார நாயகன் உயர் புகழை இசைத்தபடி நாதஇசையும் இணைந்து ஆடி வந்தது.
கொட்டு கொட்டி கூத்தாடி மகிழ்ந்து கூத்தன் மைந்தன் குண கானம் பாடுவோம்,அவன் அருள் வேண்டி தனை மறந்து தெருவில் மகிழ்ந்து நெகிழ்ந்து ஆடுவோம்.காவடி சுமந்து வரும் பக்தர் பின்னே வர, அவரின் முன்னே முருகனின் பக்தியில் உன்மத்தம் பிடித்து இப்பிறப்பில் தமை பிடித்த பதவி,புகழ் ,பெயர் எனும் மாயைகளை விடுத்து மயிலேறி விளையாடும் வள்ளி மணாளன் காவடி ஆடிவரும் ஊர்விளையட்டில் ஒயிலாட்டம் ஆடிவந்த மாமன்,மருமகன்,மைத்துனன் என்று விதமாய் உறவுமுறை கொண்ட சுப்பையாவின் வாரிசுகளை அம்மை நகர் வீதி எல்லாம் வியந்து நோக்கியது.இவர் தம் ஆட்டத்தில் ஆ றுமுக கடவுளுக்கான ஆனந்தம்,
பஞ்சாமிர்த பிரியனுக்கான பரவசம், தெய்வானை தேவருக்கான தெய்வீகம் ,தீந்தமிழ் கடவுளுக்கான திவ்யரசம் என கந்தராட்டம் கொடுக்க வந்த காவடி நாயக்கர் தெரு வழியாய் தன் சீரோட்டத்தை நடத்தியது.
மாபாரதப் போரில் அதர்மம் கொன்று தர்மம் வென்று தாரணி நலம் காக்கவென கதை தூக்கி வந்த வீமன் போல் நாங்களும் காவடி எனும் கந்தன் கணையை தூக்கி கால் கவ்விய கர்மவினைகள் களைய வந்தோம். காண்டீபன் தொடுத்த அம்புகள் அநீதி கொண்ட மாந்தரின் பகைமுடித்து சிதறடித்தது போல் எம் பால் எதிர்வரும் இன்னல்களை கதறடிக்க வந்தது கந்தனின் காவடி.
பிருந்தாவனம் மேய்ந்த மாடுகளை ஒன்றாய் கூட்ட புல்லங்குழல் இசைத்து ஒன்றிணைத்த உன் மாமன் போல் ஊரெல்லாம் பரவி நின்ற எம் சொந்தங்களை ஓர் அணியில் திரட்டி உன் காவடி சுமக்க பெரும் பாக்கியம் தந்த பெருமானே உன் கழல் சரண்.என சரணம் சொல்லி சரங்கள் போலே இருவீதி கடந்து மாரியாய் வந்து மக்களை காத்திடும் ஆதிபராசக்தி தாய் முத்துரத்தினம் குலக்கொடிகள் மங்கலம் சிறக்க வாழ்த்துரைக்கும் அன்னை மாரியம்மன் ஆலயம் வந்து சேர்ந்தது சிங்காரவேலர் காவடி.




No comments:
Post a Comment