அம்மை நகர் வீதியிலே ஆட வந்த காவடி
ஆறுமுகம் பெயர் சொல்லி பாட வந்த காவடி
இன்னல்களை அகற்றும் அழகன் அவன் காவடி
ஈராறு விழிகளினால் காக்கும் கந்தன் காவடி
உறகசயன மருகோனின் உயர்ந்த பால் காவடி
ஊர்விளையாடிவந்த முருகோனின் காவடி
எங்கள் குலம் காக்கும் கருப்பன் அவன் காவடி
ஏறுமயில் ஏறிவரும் முத்தையன் காவடி
ஐங்கரனின் அருளோடு சீர் ஆடிவந்த காவடி
ஒற்றுமையாய் சுப்பன் குலம் எடுத்து வந்த காவடி
ஓங்கி வான் அளந்து வந்த ஒய்யார சக்தி அவள் காவடி
ஒளசதமாய் ஆனா அருமருந்து அப்பன் அவன் காவடி.
காவடியாம் காவடி கந்தவேலன் காவடி
வேல் வேல் வெற்றி வேல் என கோசம் கொண்டு வீறு கொண்டு நெற்றியில் திருநீறு கொண்டு ,அழகனே.முருகனே எம் அப்பனே எமை ஆட்கொண்டு அருள்வாய் ஆனந்தனே என்று அழுது அரற்றி அவன் நாமம் போற்றி புறப்பட்டது காவடி முருகன் இல்லம் விட்டு.
குடும்பமே விரதம் பூண்டு பாட்டன் முதல் பெயரன் வரை, பாட்டி முதல் பேத்தி வரை வயது வித்யாசம் இன்றி வினை அறுக்கும் எங்கள் கந்தவேலை மனதில் கொண்டு பதின் நாட்கள் கொண்ட விரதம் ,சங்கல்பம்,கட்டிய கங்கணம் எல்லாம் இந்த தருணம் எதிர்நோக்கியே. தம் தோள்களில் காவடி சுமப்பவர் ,அவரை தாங்கி பிடிப்பவர், வேலும்,மயிலும் கொடியாய் பிடித்து முன்னே கட்டியம் கூறி நடப்பவர் மேளம் கொட்டி,வாத்தியம் இசைக்க காவடி முன் மெய்மறந்து ஆடுபவர் ,என எவ்விதம் அவர் அவர் செயல் இருந்தாலும் மனதில் கந்தன் கருணை வேண்டியே வீதிவலம் வந்தது காவடி.
பதிவிசாய் வந்த பாலமுருகன் காவடி,பக்தியுடன் வந்த பரம்பரை காவடி,உற்சாகம் கொண்டு ஓடிவந்த காவடி,கண்ணீர் மல்கி கரைந்து வந்த காவடி ,ஆவேசமாய் அரற்றி வந்த காவடி,மானசீகமாய் மகிழ்ந்து வந்த காவடி,கோபாவேசமாய் குதித்து வந்த காவடி,குறை தவிர் முருகா என உருகி வந்த காவடி, கூத்தாடி வந்த பித்தன் அவன் காவடி,பரவசம் அடைந்து வந்த பராசக்தி காவடி, மணிகள் குலுங்க வந்த மாமன் அவன் காவடி,சுற்றி சுழற்றி சுழண்டு வந்த பகவதியின் காவடி,உடன்பிறப்பாய் வந்த மதுரைவீரன் காவடிநிறைகுடமாய் மங்கையர் சிரம் ஏறிய காவடி ,சிரித்து மகிழ்ந்து வந்த சிங்கார காவடி என அகங்காரம் விடுத்து,ஆனந்தத்தை அணியாக பூண்டு கெட்டி மேளம் செந்திலாண்டவர் சிந்து புகழ் பாட புறப்பட்டது சுப்பன் காவடி.
அழகன் முருகன் அவன் அருளினால்,பாட்டன் சுப்பன் அவன் பார்வையில் பாந்தமாய் அமைந்தது அம்மைநகர் பூமியில் எழில் முருகன் இல்லம். அங்கிருந்து ஆடிவரும் ஆறுமுகன் காவடி . நந்திஎம்பெருமான் மத்தளம் தரை இரங்கி வந்து எங்களுக்கு வாழ்த்தொலி பறைந்து நின்றதோ . சேனை நடத்தி சென்ற வீரபாகு தேவர் தான் இன்று எங்கள் வழி நடத்தி சென்றாரோ, முதல் காவடி ஏந்தி நின்ற இடும்பரும் எங்கள் உடன் மகிழ்ந்து வந்தாரோ, சுட்டெரித்த சூரியர் இன்று சுகந்த ஒளி தந்து நிற்கின்றார்,அகம் மகிழ்ந்த வாயுதேவனும் சாமரம் வீசி வருகின்றார், நீறு கொண்ட வருண னோ நேற்றே வீதியெல்லாம் குளிர்வித்து சென்றாரே , நிலம் தனில் குடிகொண்ட அக்னியும் மறைந்து நின்று மகிழ்கின்றார் இதை எல்லாம் தூர இருந்து பார்க்கும் வளியோ தானே இந்த சுப்பன் காவடிக்கு சாட்சியாக மாறினான்.
அம்மைநகர் தெருவெல்லாம் இந்த காவடி வலம் வந்த புகழ் பாடும் முழுமையாய் முடிப்பதற்கு இந்த பகுதி ஒன்று தேறுமோ. புறப்பட்டகாவடி கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கந்தனின் தனையன் அயனின் மந்திரம் சொல்லி முன்னேறியது தார்சாலை நோக்கி.
தார் சாலை வந்தடைந்த காவடி பறக்கும் புகைவண்டி செல்லும் பாதையின் அகத்தே இருந்த கீழ் பாலம் வழியாக விரைந்தது. வீர முழக்கத்துடன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் குமரனுக்கு அரோகரா






No comments:
Post a Comment