Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-25. Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-25. Show all posts

Tuesday, 27 October 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-25

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-25

போற்றித் திருஅகவல் -திருவாசகம்
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!
                                                              மாணிக்கவாசகர் 

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு மற்றுமொரு நினைவுப் பகிரல் .பேரின்பம் என்பது எக்கணம் நினைக்கினும்,அக்கணம் அதே உணர்வில் மனப்பொக்கிசத்தில் தோன்றும் .எனவே இது காலாவதியான பதிவல்ல ,காலம் தோறும் நினைவில் நிற்கும் பதிவு.
மணிவாசகர் செப்பும் திருவாகத்திற்கிணங்க ,இந்த கட்டப் பதிவிற்கு மணிவாசகரின் போற்றித் திருவகவல் துணைக் கொண்டேன், இதனினும் சிறந்த வார்த்தைதான் ஏது .
  யானை முதலா எறும்பு ஈறு ஆய,
  ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
  மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
.........................................................................................................
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
இவ்விதம்  யாவிலும் பிழைத்தும் பெற்ற பிறவி அது ,ஆவி துடிக்க, 
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது......
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
கந்தன் கை வேலது  காட்டும் வழியதுவே யாம் கொண்ட பாதை என நின்ற தாத்தன் சன்னதி வழிபாடு முடித்து சுப்பன் காவடி பெருமாள் கோவில்நோக்கி புறப்பட்டுச் சென்றது .
பெருமாள் கோவில் முன்னணியில் வீற்றிருக்கும் கருப்பன் ,இங்கு வந்து சேர்ந்ததெல்லாம் கருப்பன் ,பெருமாள் அவதாரமோ இக்கருப்பன் ,காத்து ரட்சிக்கும் காவல் தெய்வத்தின் சன்னதில் தழல் அது கண்ட மெழுகு போல் உருகி தாவி குத்தித்து உலகளந்த பெருமாள் தாமென காட்டும் வகையில் காவடி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்,தன்னிலை கொண்டவரும் ஆடுவர், தனை மறந்து நின்றவரும் ஆடுவர்,கொட்டு கண்ட கூட்டமது கந்தன் காவடி தாங்கி நின்றதது ,எனில் அவன் அருளை உணர்ந்தோர் அகத்தில் குடிகொண்டு கந்தன் காட்சி தருகையில் அதன் முன்னே மகுடி வாசிப்பில் மயங்கிய அரவம் போல் ஆடிப்,பாடி மகிழ்ந்து, தத்தம் விதத்தில் வெளிபடுத்தி,பிறவி முழுமைக்கும் இக்கணம் ஒன்றே எமை நிறைத்து நிற்கும் என நினைவுப் பதிவில் பதிந்திருப்பர். என்றேனும் நம் சுயநினைவு மறந்து பிச்சியாய் ,பித்தனாய்  பிதற்றி நின்றாலும், அப்பா உன்னை நினைந்துருகி யாம் மகிந்திருந்த இக்கனத்தை மட்டும் எம்மிடம் விட்டு விடும் என மனமுருகி வேண்டி நிற்போம்.
                               பெருமாள் கோவில் தரிசனம் செய்ய மெய்யடியார் கூட்டம் முன்னேற,அங்கே  அன்று மணமுடித்த தம்பதியர் காத்து நின்றனர்,விரதம் இருந்து காவடி சுமந்தோர் தந்தனர் ஆசிகள்.பிற்பாடு இந்த காவடி நிகழ்வுக்குப் பின் இத்தனை காலம் ஆனதால் அறிய வந்தது ,அந்தத் தம்பதியர் வாழ்வு சிறக்கவில்லை என்று. பெறுவதற்கு அரிய  ரத்தினத்தை சிலர் பெறுவார், தாம் பெற்றது ரத்தினம் என்றே அறியாது அதை வீசி எறிந்தால் அதன் அருமை தெரியாது தூக்கி எறிந்தால் அது ரத்தினத்தின் குறை அன்று,அதை தந்தவனின் குறையும் அன்று ,அதன் அருமை அறியாமல் தூக்கி எறிந்த மூடர்களின் குறையே. எம் அப்பன் ஆடும் ஆட்டத்தையும் அவன் நிகழ்த்தும் நிகழ்வுகளில் சாரத்தையும் புரிந்துக் கொள்ளவும் அறிவு வேண்டும். நன்மை தீமை இரண்டினும் கற்பிப்பான் இறைவன்.
                                இந்தக்கட்டத்தில் என் மனதின் பதிவு ஒன்று..... இதுகாறும் இல்லா ஓர் உணர்வு எமை ஆட்க்கொண்டது , ஆடிப்பாடி நான் எனும் அகந்தை விட்டு,லட்ஜை எனும் உணர்வும் விட்டு,பேராயிரம் உடையப்பெம்மனுக்கு, ஓர் அடியாளாய் மாற்றுருவம் கொள்ள. ஆனந்த அனுபவம், இந்த அனுபவம் தந்த உணர்வே இன்றும் என் ஆன்மீக உலகின் அரிச்சுவடி. எவ்வுயிர் ஆயினும் அதனை தடுத்தாட்கொண்டு திசைத் திருப்ப இறைவன் திருஉள்ளம் கொள்வான்,அதற்கனா ஓர் தருணம் என்றே இதை எண்ணுகிறேன்.
                                         பெருமாள் கோவில் வீதிகளை வலம் வந்தது காவடி ஆட்டம், தெருவின் வழி தோறும் ,குளிர் பானங்களும்,தண்ணீர் குடங்களுடன் மக்கள் தங்கள் பக்தி,ஸ்ரத்தையை செலுத்தினர். காவடிகள் கரம் மாறின, அதற்காய் காத்திருந்தவரிடம்.ஒரு முறையேனும் தாமும் சுமந்து கந்தன் காவடியை சுமந்து சுகம் பெற மாட்டோமா என ஏங்கியது பக்தர் உள்ளம்.யாம் பெற்ற இன்பம் பெருக எம் மனை வாய்த்தவரும் என காவடி தூக்கியவரும்  மனமுவன்தனர்.
                                       பெருமாள் கோவில் வெளி வீதிகளில் காளி  கோவிலும்,பகவதி கோவிலும் அமைந்திருக்க, அங்கே நிலைக்கொண்டது மற்றொரு காவடிக் களி விருந்து. பகவதிக் காவடி பம்பரமாய் அந்தரத்தில் சுழன்றது ரஞ்சித் அண்ணன் கைகளில்.சக்கரம் தாங்கிய ஆதி நாயகி தீமைகளை இதுபோல் சுழற்றியே விரட்டி இருப்பாளோ , ரேவதி தூக்கிய சக்தி காவடி மகாலக்ஷ்மி தோளில் பறவையாய் இறங்கிவிட, நாட்டியம் பயின்ற எங்கள் அத்தாச்சியிடம் காவடி தன் நளினமான ஆட்டத்தைக் காட்டியது. கொண்டவர் கைகளில் அவர்தம் மனம் போல் சுழன்று, நின்று,தவழ்ந்து,தரிசனம் தந்து,தழுவி நின்று அத்தனை விந்தையும்  காட்டி வீதிவலம் முடித்து முருகன் இல்லம் அடைந்தது. அங்கு அடியார்க்கு ,அடியாராய் பாதபூசை செய்ததை ஏற்று ஆச்சாரம் குலையாமல் ஆறுமுகப்பெருமான் வீற்றிருந்த தம் இடம் புகுந்தது.
                                 சூரிய பகவான் தன அருள் பார்வையில், வருணனின்  குளிர்மையில்,வாயுதேவன் மிதமான தீண்டலில், எல்லாவித அருளும் நிறைந்து காவடி தன தலைவன்  கழலடி தொழ பழனியம்பதி  நோக்கி புறப்பட்டது.