Thursday, 21 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-21

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-21


ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி 
மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில் 
தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன் 
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்
                                                                                                 கந்தபுராணம் 

                ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகு எல்லாம் சேர்ந்து வரினும் செவ்வேளாகிய இவனது மலமறுத்த விமலமாம் திருவடியின் தூய அழகுக்கு ஒவ்வாது என்றால், பழமையான இப்பெருமானின் பெரும் வடிவு முழுவதுக்கும் யாரே உவமை கூறவல்லார்.
        இவாராய் வியப்பது யாரென அறிந்தால் நாமும் வியப்போம்.ஆம் யாரை வெல்ல, யாரின்  கொடுமை களைய பரம் பொருள் ஞானப் பழம் பொருளாய் அவதரித்ததோ அந்த சூரன் சொன்ன சொற்கள். மதி கெட்டு அவன் இதை சொன்னானோ ஏனெனில் அவன் பழனிஎம்பதி  பாலகரின் பகைவன் அன்றோ? .ஆம் மதி கெட்டுசொல்லவில்லை மதி பெற்று செப்புகிறான் இந்த சொற்களை. கோர யுத்தம் நடக்கும் பொழுதில் மாயை பெற்ற சூரன் மாயனாய்  மாறி பல ரூபம்  கொண்டு அலைகளித்தபோது அத்தனையும் வென்ற கந்தவேல் சிறிது நேரம் அவன் சிந்தையில் நின்ற அகந்தையை அகற்ற அவன் உள்ள, உருகியது குமரனின் கோலவடிவு கண்டு.திருவடி முதல் திருமுக அழகு காண பலஊழி காலமும் காணாதே என கசிந்துருகி நின்றான்.
சூழுதல் வேண்டுந் தாள்கள் 
தொழுதிடல் வேண்டும் அங்கை 
தாழுதல் வேண்டுஞ் சென்னி 
துதித்திடல் வேண்டுந் தாலு 
ஆழுதல் வேண்டுந் 
தீமை அகன்றுநான் இவற்கா ளாகி 
வாழுதல் வேண்டும் 
                         என்றும் வாயார வாழ்த்தி நின்றான்.பின்னர் கந்தக்கடவுள் விஸ்வரூப தரிசனம் முடித்து வேலும் மயிலும் என அகாரம் குறுக்கி அழகனாய் நின்று இருக்க  அவனது சிந்தையும் குறுகி சினம் கொண்டது.பின்னர் கொக்கரித்து மரமாகி சூர சம்ஹாரமாகி சேவலும் கொடியும் ஆனான்.தமை எதிர்த்து நின்ற அரக்கனையே சத் புத்தி அளித்து தன பக்தனாய் கந்தன் மாற்றுவான் எனில் பரம்பரையாய் அவன் அடிமை பூண்ட சுப்பன் குடும்பத்தை காணாது விடுவானோ, தன கடைக்கண் கருணை பார்வை பார்க்க திரண்டது சொந்தங்கள் மருண்டது அம்மைநகர்.காவடி எனும் பெரும் நிகழ்வை விரித்து கூற வேறு வழியின்றி அதன் மேன்மை உணர்த்த  கச்சியப்பரையும்,
அருணகிரியாரையும் அதன் உரை கொடுத்த வாரியாரையும் துணை கொண்டு அவரிடம் இருந்து தீந்தமிழ் கடவுளுக்காய் புகழ் பாட சில வரிகளை கடனாக பெற்றேன்.
                       வீதி வழி  ஓடிவரும் பிள்ளை சிறிதே அன்னை அன்னைமடி அமர்ந்து ஆசுவாசம் பெற்று அடுத்த அடி ஆர்வமாய் விரைவதை போல்,நாயகர் தெருவழியாய் கடந்து வந்த காவடி அம்மைநகர்  மங்கையரின் குங்குமத்திற்கு ஆதரவாய் என்றும் அவர் தம் கூக்குரலுக்கு குறை தவிர்க்க விரைந்து வரும் மாரியம்மன் ஆலயம் வந்து சேர்ந்தது.சக்தி காவடி தூக்கி வந்தவளுக்கு சன்னதமாய் அந்த அம்பிகை வந்து இறங்க அதனுடனே அனைவரும் சேர்ந்து ஆடி மகிழ்ந்து அதன்பின் ஆலயத்தில் தீப ஒளியில் அன்னையின் முகம் கண்டு அகம் மகிழ்ந்து அடுத்து அவள் மூத்த மகன் சன்னதியில் வரிசையாய் நின்று வந்தனம் செய்தது
                                 வீதி வலம்  வர வர வந்த காவடிகள் எல்லாம் இன்னும்,இன்னும் உரமேறி.முறுக்கேறி முன்னேறி கொண்டிருந்தது. காவடிகள் தூக்கிய தோள்கள் உயர்த்தி பிடித்து உள்ளமதில் உவகை கொண்டு ஊர்விளையாடும் பொழுது, அவரவர் இருந்த நிலை, புவியில் இப்படி ஒரு இடமா, சுயமாய்  வந்தவை தானா எல்லாம் அல்லது ஒருவன் தொடுத்துவிட்ட அம்புகள் தாமா, சோதனைக்கு உள்ளான  அன்பர்களுக்கு  எல்லாம் அருளும் விதமாய் அவரவர் இதயக்கமலத்தில் இருள் அகற்றும் சோதியாய், கடந்தவற்றை கடக்க வைக்கும் கடம்பனாய் ,அதப் பொழுதில் அவனன்றி வேறொன்றும் இல்லை என்பதை உணர்த்தி நிற்கும்  ஆதி குருவாய்,அன்பர்களை தம் திருவடியில் இணைத்து கொண்டு காவடியை செலுத்தி நின்றான்.
                                  காவடியை சுமந்த நெஞ்சம் நின்ற நிலை சொல்லில் வடிக்க இயலாது செழுமை பெற்ற எம் தமிழ் மொழியும் பக்தி பரவச நிலை உணர்த்துமோ அறியேன் நான்..வயிற்றில் இருந்து புறப்படும் பரவசம்,அன்னை வயிற்றில் தானே உதித்தோம் என்பதை சூசகமாய் சொல்லுமோ,பிசைந்து,புரட்டி பக்திக்கு ஒரு வடிவம் கொடுக்க  
முயல்வதை போன்ற ஒரு பிரமை,புறப்பட்ட உணர்வு அது மேலே உந்தப்பட்டு உணர்ச்சி பெருக்காகி நெஞ்சில் குடி கொண்டு வியாபித்து இருக்கும் நேரம் என் பழவினையும் தோய்ந்து  பண்டிதனே உன்னை கண்டுகொண்டேனோ என பரிதவித்து நிற்கும். பரவசம் வியாபித்து  நின்ற நெஞ்சமது விம்மி, கண்டத்தில் குடி கொண்டு கந்தா என
கதறத்  துடிக்கும். அந்நேரம் வரும் ஆவேசம் சிலர்க்கு ஆவி துடிக்க வெளியேற,பலரோ வாய் மூடி ஊமையாய் கண்ணில் தாரையாய் கண்ணீர் மல்க கரைந்து விடுவார்கள்.
வாயால் வாழ்த்து கூறி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு,கண்ணீர் பெருகி தன் கரையெல்லாம் துடைத்து விட,எல்லா கட்டும் அறுந்து உல்லாசமாய் ஓர் ஆட்டம் ,உவகையில்  ஓர் ஆட்டம்.உன்னிடம் சொல்லி விட்டேன் என் பக்தியினை,
நினை நினைந்துருகும் பக்தியின் அருமையையும் கண்டு இன்புறுகிறேன் எனும் ஆனந்த நிலை.இறைவா இப்படியே எமை உன்னிடம் அடிமை பூன  விட்டு விடு என அந்தரங்கம் கதற,வீதிகள் கண்ணில் கருத்தினில் படாமலே முன்னேறியது  முருகன் காவடி கருப்பன் சன்னதி நோக்கி.

                              

No comments:

Post a Comment