Monday, 18 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-18

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-18


                                              கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முருகப் பெருமான் திகடச்சக்கர என்று ஆனைமுகன் துதி சொல்லி
வாக்கெடுத்து கொடுத்து கவிபுனைய அருள் புரிந்தார். அவ்வண்ணமே அவர் தம் அப்பன் புகழ் பாட முனைந்த சேக்கிழார்  பெம்மானுக்கு உலகெலாம் என்று அடி எடுத்து கொடுத்து எம் ஆவுடை அமர்ந்த அப்பன் அடியெடுத்துக் கொடுதது திருத் தொண்டர் புராணம் வரைய வைத்தார். தம் திருவிளையாடற் மட்டும் உலகம் அறிந்தால் போதுமானது அன்று என்று எம் அப்பன் நினைத்ததனால் உருவான புராணம் திருத்தொண்டர் புராணம். வாழ்வின் இலக்கு பக்தி செய்தல் எனும் பேருண்மையை உலகினுக்கு எடுத்துரைக்க அவனால் மேம்பாடு அடைந்த மேன்மக்களை பற்றி எடுத்துரைக்க மற்றும் சில ஆன்மாக்களை அனுபிவிட்டான்.
                                             பக்தி செய்தல் என்பது தன்னை மறந்து தலைவனை நினைந்து தன்னலம் இல்லாமல் தன்  சுகம் பேணாமல் தாளாத உறுதியுடன் அவன் பாதம் சேர்த்தல் என்றால், அத்தகு பக்தியை வரமாய் பெற நமக்குஆண்டவன்  கட்டளை வேண்டும்.ஆதியை அடைய ஆன்மாக்களுக்கு அவன் அருளும்,அவன் அருளால் அவனை வணங்க நமை நடத்தி செல்ல மேன்மை கொண்ட முன்னோரும் வேண்டும். குருவருள் இன்றி குன்றம் ஏறி கொடி  நாட்ட முடியாது அவ்வாறான ஞான குருவாக நமக்கு கண்ணால்  காணாவிடினும் நம் ஆத்மா ஞானத்தில் நிறைந்து அருள் புரியும் பாட்டனை பெற்றது நம் தவப்பயனே. 
                                                பக்தி என்பதை மனத்தால் உணர்ந்து வாக்காய் வடித்து செயலால் செய்து வெளிக்கொணரலாம்.நம்மோடு வைத்திருந்த பக்தி மனம் பதிகம்,பாட்டாய் கமழ்ந்து ஆடி பாடி ஆண்டவனை அடையும் போது  அதை செய்பவர் அன்றி காண்போரையும் கட்டுண்டு  பக்தி செய்யத் தூண்டும்.அவ்வாறான ஒரு நிகழ்வு நம்மை ஆட்சி செய்து நமை சார்ந்தவறையும் ஆட்கொண்டது எனில் அது காவடி திருவிழா என்பதில் ஐயம் இல்லை.அந்த உணர்வு பொங்கிய தமை மறந்த நிலை எழுத்தில் வடிக்க எவ்வளவு தூரம் இயலும் என்பதையும்  நம் பாட்டன் வசம் இத்தருணத்தில் மனதார ஒப்படைக்கிறேன்.
    கவின்மிகு காவடிகள் கந்தவேல் காவடிகள் 
       சேந்தன் காவடிகள் செந்தில் வேல் காவடிகள் 
                   காங்கேயன் காவடிகள் கார்த்திகேயன் காவடிகள் 
                முருகவேல்  காவடிகள் முத்தையன் காவடிகள் 
                     கருணை வேல் காவடிகள் கருப்பையன் காவடிகள் 
                     சுப்பையன்  காவடிகள் சூர சம்ஹார  காவடிகள் 
                        மால் மருகன் காவடிகள் மதுரை வீரன் காவடிகள் 
                          முத்து முத்தான ஈசன் மைந்தனின் பால் காவடிகள் 

                                      அணிவகுத்து நின்றன அம்மைநகர் வலம் வர, தண்டாயுத பாணி நடு நாயகமாய்  வீற்றிருக்க இருபுறமும் எழில்  காவடிகள். இத்தனை நாள் செய்த தவம் எய்தும் தருணம் வந்தது. கந்தவேல் மந்திரத்துடன்,கருப்பன் அவன் மந்திரம் சொல்லி கருப்பையாவால்  செந்தில்வேல் சிரத்தில் அபிசேகம் செய்விக்க சிறு சொம்பில் பால் சேர்த்து சிக்கெனவே சிவன் பாதம் பிடித்தார் போல் சீரியமுறையில் கந்தக்காவடியில் பால்சொம்பு கட்டப்பட்டது.ஓம் சரவண பவ என்று சொல்லி செம்பில் பால் வார்த்து சுமந்து வரும் செல்வங்களை காப்பாற்று எனவும், ஓம் நமசிவாய என்ற ஓம்காரன் பெயர் சொல்லி ஓடிவரும் நின் பக்தர்களை காத்து நில் என்றும் பால் காவடிகள் பக்குவமாய் கட்டப்பட்டது.வீரவேல்,வெற்றிவேல் என சொல்லி வில்லில்  இருந்து வரும் அம்பு போலே சொல்லில் இருந்து வரும் சுவை போலே முருகன்  இல்லம் விட்டு அம்மைநகர் வீதி வலம்  வர, எங்கள் பாட்டன் அவன் பெயர் நிலை நாட்ட, கனி கொடுத்து மகிழ்வித்த குடும்பம் இன்று காவடி கொண்டு காவியம் படைக்க வென்று, வினை முடித்து வென்று அன்று ஆண்ட எங்கள்  பாட்டன் சுப்பன் நாமம் சிறக்கவென காவடிகள் தயாராய் நின்றன.
                                                    முருகன் இல்லம் முற்றம் அது முற்றும் அப்பன் அவன் திருவருளால் நிறைந்திருந்தது. பூக்கள்  மாரி போல் பொழிய செய்து எங்கள் பழனியம் பதியை குளிர செய்து  சந்தானம்,சவ்வாது மணக்க, பால் காவடி,சந்தன காவடி கொடுமுடி நீர்காவடி, பாலன் அவன் பதுமை காவடி  என என்குலமே ஒன்றிணைந்து ஓம் காரம் கூவி, தீப ஒளி  கூட்டி, தீஞ்சுடர்  நாயகன் தீந்தமிழ் கடவுள் முருக  பெருமானின் காவடியை சிரத்தில்  தூக்க நின்ற தருணம். தாரை தாரையாய் கண்ணீர், நிலை கொள்ளாத தவிப்பு,தேகம் சிலிர்க்கும் அருள், மேனி முறுக்கி நின்ற கருப்பன், கதறி துடித்த சக்தி, முறைத்து நின்ற முத்தையன், மருகி நின்ற வீரன், உல்லாசமாய் உரக்க சிரித்து நின்ற காளி அதனையும் ஓரிடத்தில் அம்மைநகர் அகமதனில். 
                                                     வயதில் சிறியவர் முதல் காவடி பச்சை பட்டை உடுத்தி நின்ற என் மைந்தன் ஸ்ரீராமனுக்கு இராமன் வம்சம் சார்பாய் முத்துக்குமரர் கரங்களினால் மாவடியானும்,அங்கயற்கண் அம்மையும் எடுத்து தர பாலகன் முகமும் பார்த்தவர் முகமும் மிளிர்ந்தன .வரிசை வரிசையென அழகு காவடிகள் கங்கணம் கட்டி காத்து இருந்தோர் தோள்  சேர ஒவ்வன்றும் ஓர் கந்தன் கருணையினை சொல்லும்.ஸ்ரீ ராமன் முதல் அவன் தாத்தா வரை வயது வாரியாய் நம் குல மூத்தோர் முறையாய் விரதம் ஏற்றோர் தோள்களில் காவடியை ஏற்றிவிட ஒவ்வரு காவடியும் சுமந்தோர் தம் பக்தி ஸ்ரத்தை சிறக்க பாந்தமாய் பரமன் மகன் காவடியை தோள்களிலும்,அவன் பக்தி உணர்வை சிந்தையிலும் தாங்கி, உணர்ச்சி பெருகி,உள்ளம் உருகி ,உவந்து,மகிழ்ந்து ,உளமார சுமந்தனர்.
                    வாய் விட்டு கதறி,மனம் விட்டு மகிழ்ந்து,மத்தியில் கந்தனை நிறைத்து, கண்ணீர் பெருகி ,அண்டம் அதிர வந்த வீரபத்திரர் போலே பார்த்திபன் அவன் ஆடி வர, கூவி கதறி ஆதிசக்தியாய்  நாரி
சதங்கையுடன்நடந்துமகிழ்ந்து வர,கருப்பனும்,முத்தையனும் ,மதுரைவீரனும்,பகவதியும் அருளோடு துணைவர ஆரம்பம் ஆனது அம்மைநகர் ஆலயங்கள் சுற்ற புறப்பட்ட காவடி வீதி உலா.
                         


No comments:

Post a Comment