Saturday, 26 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-12

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-12


காவடிக்கு முன்பு நாம் செய்த குலதெய்வ வழிபாட்டை பற்றி பகிர்ந்து கொண்டு இருந்தோம்.குல தெய்வ வழிபாடு என்பது  நமது தமிழர் மரபின் தொன்று தொட்டு வரும் மரபு.நாம் போற்றும் குலதெய்வங்கள் ,பெருந்தெய்வங்களின் அம்சமாகவே இருக்கும்.ஒவ்வரு கோவிலிலும்,சிவாம்சமாக ,சக்தியின் அம்சமாக,பெருமாள் அம்சமாக ,மற்றும் நம் முன்னோரில் ஒரு பெண் தெய்வமாக கட்டாயம் குடியிருப்பார்.

                          கருப்பன் என்பதே பெருமாளின் அம்சமாக காக்கும் தெய்வமாக இருக்கும்,இவர் தம் சகோதரி அங்காலேஸ்வரி சக்தியின் அம்சம்,இருக்குமிடம் கட்டாயம் இருப்பார்.சோனை சாமி,அய்யனார்,முனீஸ்வரர்,பைரவர் ,வீரபத்ரர் இவர்கள் எல்லாம் சிவம்சமாக இருப்பார்கள்.பேச்சியம்மன் என்பது சரஸ்வதி அம்சமாக இருக்கும்,சப்தமாதர்கள் ஒரு பீடத்தில் இருப்பார்கள்.பிள்ளையார்,முருகப்பெருமானும் பரிவார தெய்வங்கள் வரிசையில் இருப்பார்கள்.நம் முன்னோர்கள் குலதெய்வம் என்பதை தமது இருப்பிடத்திற்கு அருகில்,அமைத்து பூஜித்து வந்திருப்பார்கள்.ஆனால் இன்று பொருள் தேடி பல காதம் வந்து விடுகிறோம்.ஆனாலும் வருடத்தில் ஓர் நாள்,அங்கே சென்று பொங்கல் வைத்து ,படைத்து வணங்கினாலும் போதும்.தாய் தன குழந்தைகளை காப்பது போல் காத்து தரும்.ஆகாம விதிப்படி அமைந்த கோவில்களுக்கு ஆறுகால பூஜை அவசியம், ஆனால் நம் குலதெய்வம் வருடத்தில் ஒருநாள் வந்தாலும் போதும் அதையே வருடம் முழுமையும் வந்த பயனை தந்து நம்மை காத்தருளும்.
எனவே குல தெய்வ வழிபாடு என்பது வருடம் ஒருமுறையும்,சுபகாரியங்கள் நடை பெரும் முன்பும் கட்டாயம் செய்யப்பட வேண்டியது.

                        காவடி எனும் மாபெரும் ஆன்மீக பயணத்திற்கு முன்பும் நாம் முதலில் நம் குலதெய்வத்தை வழிபட்டே தொடங்கினோம்.அதன் படி மே மாதம்  23 தேதி பயணம்,சக்குடியை முடித்து குருச்சியை நோக்கி புறப்பட்டது. அதன் நடுவில் ஓர் சுவாரஸ்யமாய் அன்று தான் 10 ஆம் வகுப்பு  பரீட்சை முடிவு.எங்களுடன் ஸ்ரீராமனும் பயணம் செய்ததால் பத்து மணி ஆகும் முன்னே பத்து தரம் வேனுக்குள்ளே நடை பயின்றான் ஸ்ரீராமன். வண்டி மானாமதுரை சென்றடைந்தது,குறுச்சி  செல்லும் திருப்பம் அங்கே சர்ச்சுக்கு அருகே நிறுத்தப்பட்டு சில பொருட்கள் வாங்கப்பட,மணியும் 10 ஐ தாண்ட பசலைகாரர்களின் வாழ்வில் அங்கம் வகித்த அந்த இடத்தில் வெளிப்பட்டது ஸ்ரீராமன் பரீட்சை முடிவு.அவனும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற விவரம் அவனது அரவிந்த் டாடி மூலம் வெளிப்பட, மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் ஆன பயணமாய்,அனைவரிடமும் ஆசியும்,வாழ்த்தும் பெற்று பயணம் தொடர்ந்தான் ஸ்ரீராமன்.

                    குறிச்சி  ,இது எங்கள் முத்தையன் கோச்சடை விட்டு எங்கள் முன்னோருடன் அவர்களுக்காகவே பிடி மண்ணாய் உடன் வந்து வேரூன்றிய இடம்.சிவகங்கை சீமை வானம் பார்த்த பூமியாய் இருப்பினும்,எங்கள் மாவடியான் திருவடியும்,அவனை சுற்றிய வயல்வெளியும் என்றும் பசுமையுடன் தான் இருக்கும்.நெல்,வாழை ,கரும்பு என ஏதாவது ஒரு பயிர் அவரை சுற்றி செழித்து வளைந்து கொண்டு தான் இருக்கும்.
மதுரையை அடையும்  முன்னே அதன் கோபுரங்கள் கட்டியம் கூறும் அம்மையப்பன் இருப்பை.அதேபோல் குறிச்சியை  நெருங்கும் முன்னே எங்கள் மாவடியான் கோபுரமாய் மருத  மரங்கள் நெடிந்துயந்து நிற்கும்.

              கிராமத்து சந்துகளை கடந்து  சிறு கால்வாயை தாண்டி,வயல் வரப்பில் இருக்கும் தென்னை மரங்களை சுற்றிக்கொண்டு ,பொங்கல் பானையுடன் நாங்கள் செல்லும் சுகமே சுகம்.வரப்பில் சென்று அறியாத நாங்களும் ஒரு புது அனுபவமுடனே எங்கள் ஐயனை காணும் பக்தி மிகுந்த ஆவலுடன் செல்வோம்.இரண்டு பெரும் மருத மரங்களும், ஓர்  ஆலமரமும், குடைபோல் கவிழ்ந்திருக்க அதன் இயற்க்கை நிழலில் நடு  நாயகமாய் பீடமாய் எங்கள் குலதெய்வம் மாவடிக்கருப்பன் ,முத்தையன்,மாட மாளிகை இல்லா மன்னவன் வீற்றிருப்பான்.அவருக்கு இடப்புறம் ஆணைமுகனும், அவன் தாய் அங்காலேஸ்வரியும் ,முருகப்பெருமானும் கொலு இருக்க.
அவர்களுக்கு நேரெதிர் இடப்புறமாய், வீரபத்திரர்,இருளப்பசாமி,பதினெட்டாம் படி கருப்பு,பேச்சியம்மன்,ஏழு கன்னிமார் என அருள் செய்கின்றனர். மாவடியானுக்கே எதிரே சோனை சாமியும் பலிபீடமும் இருக்கும். மாவடியானுக்கு நேரெதிர் வலது புறம் கருப்பாயி அம்மன்,ராக்காயி அம்மன்,மற்றும் இருளாயி அம்மன் சன்னத்திகள் அமைந்திருக்கும்.

             வழக்கமாக நாங்கள் செல்லும் நேரத்திற்கு பின்னே அங்கு சென்றடைய,அன்று எங்கள் குலதெய்வம் எங்களுக்கு அருள் பாலிக்க,ஆசி கூற பூஜை ஏற்றுகொள்ள தயார் என இருந்தார்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஷ்வாமித்திரர் போல் எங்கள் குடும்பத்தினரிடம் சபாஷ் பெற்றார் எங்கள் பூசாரி.அவரும் அன்றொருநாள் மட்டும் தன உணவகத்தை மறந்து மாவடியான் பூசாரியாக முழுதாய் ஈடுபட்டு இருந்தார்.
அவரையே மாற்றிய அற்புதம் கந்தனை தவிர யாரை சாரும்?

            காலை உணவை மாவடியான் சன்னதியில் பசியாறி,பின்னர் மனமும் ஆறினோம். ஆம் அங்கே காவடிக்கான சிகப்பில் பச்சை இட்ட கச்சையை வைத்து வணங்கினோம். எங்கள்  குலதெய்வமதை மனமார வழிபட,அங்கே பெரியத்தான் மீதிறங்கி இந்த காவடி சிறக்க உடன் வந்து,தக்க துணை தந்து அனைவர் குறை தீர்ப்பேன் என சூளுரைத்தது மாவடிகருப்பு. அதன் பின்னே,முருகனுக்கு எடுக்கும் காவடிக்கு  அச்சாரமாய் முத்தையன் சன்னதியில் ஸ்ரீராமனுக்கு கச்சை கட்டி அவனை கைதூக்கி ஆடவைத்து முதல் அடி எடுக்க வைத்தார்கள் அவனுடைய மூர்த்தி தாத்தா.அது பார்த்திபனூர் கருப்பன்,மாவடிகருப்பனுக்கு கட்டிய கச்சை ஆனது.

           குளிர்ச்சி மிக்க குறிச்சி திட்டை விட்டு,மிகுந்த குளிர்ந்த  மனதுடன் பார்த்திபனூர் நோக்கி பயணப்பட்டோம்.





No comments:

Post a Comment